பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் அதிவேக ரயில் இணைப்பை கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டமாக தென்னிந்திய மாநிலங்களின் பிரதான நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என அண்மையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் நாட்டின் பிரதான நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 73 நிமிட பயணத்தில் செல்லும் வகையிலான நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய ஏஐ டேட்டா மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரயில்வே துறை அமைச்சர் தென் இந்திய மாநிலங்களுக்கான அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். புல்லட் ரயில் சேவை நமது பயண நேரத்தை வெகுவாக குறைக்கும், முக்கிய நகரங்களை ஒருங்கிணைத்து ஒரு பொருளாதார மண்டலத்தையும் உருவாக்கும் என கூறினார்.
இந்தியாவில் அமராவதி, ஹைதராபாத், சென்னை , பெங்களூர் , புனே மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர் இந்த புல்லட் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும்போது இந்த நகரங்கள் அனைத்துமே பொருளாதார ரீதியாக பெரிய அளவிலான முன்னேற்றங்களை அடையும் எனக் கூறினார்.
புல்லட் ரயில் மூலம் அமராவதி மற்றும் ஹைதராபாத் பயண நேரம் வெறும் 70 நிமிடங்களாக குறைக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல அமராவதியில் இருந்து சென்னை இடையிலான பயண நேரம் 112 நிமிடங்களாக குறையும் என கூறினார். சென்னையில் இருந்து பெங்களூரு இடையிலான பயன் நேரம் வெறும் 72 நிமிடங்களாக குறையும் என தெரிவித்தார். இதில் சென்னை பெங்களூர் இடையிலான புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
தென்னிந்தியாவின் பிரதான நகரங்களாக சென்னை மற்றும் பெங்களூரு ஆகியவை இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே பயணம் செய்கிறார்கள். இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைப்பது என்பது மேலும் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். அந்த வகையில் தற்போது பெங்களூரு சென்னை இடையே சாலை மார்க்கமாக எக்ஸ்பிரஸ்வே பணிகள் வேகமாக நடைபெற்ற வருகின்றன. அடுத்ததாக புல்லட் ரயில் திட்டமும் கொண்டு வரப்படுவது இரு நகரங்களையும் இணைப்பை இன்னும் எளிமையானதாக மாற்றும்.


Click it and Unblock the Notifications

