குழந்தைகள், பெரியோர்கள் என பாரபட்சம் இல்லாமல் விரும்பி உண்ணும் பாஸ்ட்புட் உணவுகளில் பர்கரும், பீட்சாவும் உண்டு.
அப்படி ஒரு ருசிகரமான உணவை தயாரித்து விற்பனை செய்யும், உலகின் முன்னணி பாஸ்ட்புட் நிறுவனம் தான் பர்கர் கிங்.
இந்த நிறுவனம் டிசம்பர் முதல் வாரத்தில் தான் தனது பங்கு விற்பனையை அறிவித்தது. இதனையடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் தான் பங்குகளை பட்டியலிட்டது.
பங்கு விலை நிலவரம்
சொல்லப்போனால் நடப்பு ஆண்டில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக பர்கர் கிங் உள்ளது. ஏனெனில் 92% பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில், முந்தைய நான்கு அமர்வுகளில் சேர்த்து மொத்தம் 265% ஏற்றம் கண்டது. ஆனால் கடந்த இரண்டு அமர்வுகளாகவே தினசரி 10% மேல் சரிந்து வருகின்றது.
லோவர் சர்க்யூட் ஆன பர்கர் கிங்
இன்று பர்கர் கிங் நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 10 சதவீதம் குறைந்து, 161.45 ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையானது 179.35 ரூபாயாகும். இதே என்எஸ்இ-யிலும் இந்த பங்கின் விலையானது 19 சதவீதம் குறைந்து 161.45 ரூபாயாக உள்ளது. இதன் முந்தைய அமர்வு விலையானது 175 ரூபாயாகும்.
சந்தை மூலதனம் எவ்வளவு?
இதற்கிடையில் பர்கர் கிங்கின் சந்தை மூலதனம் 6,161 கோடி ரூபாயாக பிஎஸ்இ-யில் சரிந்துள்ளது. கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் இந்த பங்கின் விலையானது 26.32 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த பங்கின் விலையானது காலை அமர்வில் 20% ஏற்றம் கண்டு, வரலாற்று உச்சமான 219.15 ரூபாயினை தொட்டது. ஆனால் மதியத்திற்கும் மேல் 10 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 179.35 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
பங்கு வெளியீட்டில் விலை?
கடந்த டிசம்பர் 2ம் தேதி தனது பங்கினை விற்பனை செய்த பர்கர் கிங், 59 - 60 ரூபாய் என்ற நிலையில் வெளியிட்டது. இதன் பிறகு டிசம்பர் 14 அன்று 92.25% பிரீமிய விலையில் பட்டியலிட்டது. சந்தையில் இது தொடக்கத்தில் 115.35 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது. இந்த நிலையில் 4 அமர்வுகளில் மொத்தம் 265% ஏற்றம் கண்டு, அதனையடுத்த இரண்டு அமர்வுகளிலும் சரிவினைக் கண்டு வருகின்றது. இது புராபிட் புக்கிங் காரணமாக இந்த வீழ்ச்சியா? இல்லை என்ன காரணம் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.