உலகின் முன்னணி பாஸ்ட்புட் நிறுவனமான பர்கர் கிங் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டு தனது வர்த்தக வளர்ச்சிக்காக முதலீட்டைத் திரட்டியது. இதன் படி டிசம்பர் 2ஆம் தேதி ஒரு பங்கு 59 முதல் 60 ரூபாய் விலையில் விற்பனை செய்யத் துவங்கியது பர்கர் கிங்
இந்நிலையில் திங்கட்கிழமை 92 சதவீத ப்ரீமியம் விலையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பர்கர் கிங் பங்குகள், கடந்த மூன்று நாளில் ஏற்பட்ட தொடர்ந்து வளர்ச்சியின் காரணமாக இதன் விலையில் 73 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 20 சதவீத பங்கு வளர்ச்சியைத் தொடர்ந்து 60 ரூபாய்க்கு ஐபிஓ-வில் விற்பனை செய்ய்பட்ட பர்கிங் பங்குகள் சுமார் 199.25 ரூபாய்க்கு உயர்ந்து 2 வார காலத்தில் சுமார் 232 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளையில் பர்கர் கிங் பங்கு வளர்ச்சி, தொடர்ந்து இதேபோன்று இருக்காது என்றும் அப்பர் சர்கியூட் அளவை அடையும் போது அதிகளவிலான லாபத்தைப் பெறலாம். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பர்கர் கிங் சரிவடையும் ஒரு நிலை உள்ளது இதனால் இப்பங்கு முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனப் பங்குச்சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிரடி வளர்ச்சியின் காரணமாகப் பர்கர் கிங் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 2 வார காலத்தில் 4,402 கோடி ரூபாயில் இருந்து 7,604.47 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்களில் கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 114 சதவீத ப்ரீமியம் விலையிலும், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் 111 சதவீத ப்ரீமியம் விலையிலும், ரூட் மொபைல் 104 சதவீத ப்ரீமியம் விலை பட்டியலிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பர்கர் கிங் 92 சதவீத ப்ரீமியம் விலையுடன் 4வது இடத்தை அடைந்துள்ளது.
இன்றைய நிலையிலும் பர்கர் கிங் இந்தியாவின் சக போட்டி நிறுவனமான ஜூம்லியன்ட் புட்வொர்க்ஸ் மற்றும் வெஸ்ட்லைப் டெவலப்மெண்ட் நிறுவன பங்கு மதிப்பை விடவும் குறைவாகவே உள்ளது.
வெஸ்ட்லைப் டெவலப்மெண்ட் நிறுவனம் இந்தியாவில் மெக்டொனால்டு நிறுவனத்தை நிர்வாகம் செய்கிறது. ஜூம்லியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் டாமினோஸ் பீட்சா மற்றும் டன்கின் டோநட்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்கிறது.