டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், மாநில அரசும் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதற்கிடையில் முடங்கி போயுள்ள பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் கூறுகின்றன.
மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்,
மேலும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1,540 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சுமார் 8.6 கோடி முதலீட்டாளர்களின் 4.84 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
மேலும்அதிரடியான நடவடிக்கை மூலம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 கூட்டுறவு வங்கிகளும் வரும் என்றும் ஜவடேகர் கூறியுள்ளார்.
இது தவிர விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதோடு உத்தரப்பிரதேசத்தில் குஷி நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதத்தில், நிர்மலா சீதாராமன் கூட்டுறவு வங்கிகளை மேற்பார்வையில் கீழ் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தினை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இது அமல்படுத்தப்பட்டுள்ளது.