உலகளவில் காஃபி விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களால் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்க மிக முக்கியக் காரணம் கஃபே காஃபி டே நிறுவனம் என்றால் மிகையில்லை.
இந்தியாவில் காஃபி பிரியர்களை விடவும் டீ பிரியர்கள் அதிகம் என்றாலும், நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு இளைஞர்களையும், இந்திய காஃபி பிரியர்களையும் ஒட்டுமொத்தமாகக் கஃபே காஃபி டே கைப்பற்றிய ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆனால் இந்நிறுவனம் தற்போது அதிகளவிலான கடனில் தவிக்கும் காரணத்தால் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தக்கூட முடியாமல் தவித்து வருகிறது. இதனால் கஃபே காஃபி டே திவாலாகும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட உள்ளது.
கஃபே காஃபி டே கடன் தவணை
காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஃபே காஃபி டே பிராண்ட் மற்றும் அதன் வர்த்தகங்கள் பெற்றுள்ள கடனுக்கான மார்ச் காலாண்டுக்கான தவணை தொகையைச் செலுத்த முடியாமல் நிற்கிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
இதனால் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் இந்நிறுவனத்தைத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதன் மூலம் NCLT அமைப்பு காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடனுக்கு முறையான தீர்வை எட்ட முடியும் என நம்புகின்றனர்.
அடமான பங்குகள்
இதுமட்டும் அல்லாமல் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ள நிலையில், அதைப் பணமாக்கவும் பல முயற்சித்து வருகின்றனர். இதுகுறித்து காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் எவ்விதமான பதிலையும், கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
மொத்த கடன் அளவு
காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இதுவரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 518 கோடி ரூபாய் அளவிலான கடனை நிலுவையில் வைத்து உள்ளது.
டாடா உடன் பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் சில பிரிவு வர்த்தகத்தை டாடாவிற்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் அதீத தொகை கோரிய காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
அடுத்து என்ன நடக்கும்..?
காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குளோபல் டெக்னாலஜி வில்லேஜ்-ஐ பிளாக்ஸ்டோன் குரூப் நிறுவனத்திற்கு 2700 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததில் 2வது பகுதி பேமெண்ட் ஆன 700 கோடி ரூபாயை எதிர்கொண்டு காத்திருக்கிறது. இந்தத் தொகை வந்தால் பெருமளவிலான பிரச்சனைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.