பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் அதற்கான நிதி திரட்டும் வகையில் அரசுக்குச் சுமையாக அல்லது வர்த்தகம் இல்லாத நிறுவனங்களை விற்பனை செய்து அதன் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளைக் கடந்த சில வருடங்களாகவே பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம்
ஏர் இந்தியா மத்திய அரசின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான சொத்து, ஆனால் இந்நிறுவனம் தற்போது 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனை சுமந்து வர்த்தகம் பெற முடியாமலும், தொடர்ந்து இயங்க முடியாமலும் தவித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவு செய்தது.
ஏர் இந்தியாவை விற்பனை
பல வருடங்களா ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது டாடா உட்படச் சில நிறுவனங்கள் ஏர் இந்தியாவை மொத்தமாக வாங்க முன்வந்து அதற்கான பணிகளில் மத்திய அரசு இருக்கும் போது புதிதாக ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி வழக்கு
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு தொடுத்து வரி நிலுவை வழக்கு 6 வருடமாக நடந்து வரும் நிலையில்,
டிசம்பர் மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது. இந்தத் தீர்ப்பில் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாகச் சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு
கெய்ர்ன் எனர்ஜி நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த 1.2 பில்லியன் டாலர் தொகைக்கு இந்திய அரசிடம் இருந்து விரைவாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் தனது கிடைக்கவேண்டிய 1.2 பில்லியன் டாலர் தொகைக்காக இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.
ஏர் இந்தியா விற்பனையில் தடை
இப்புதிய வழக்கின் காரணமாக ஏர் இந்தியா விற்பனை தடைப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தை யார் கைப்பற்றினாலும் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனவே ஏர் இந்தியாவைக் கைப்பற்றத் திட்டமிடும் டாடா குழுமம் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.