கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கு 6 வருடமாக நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது.
இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.4 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த 1.4 பில்லியன் டாலர் தொகைக்கு (செலவுகள் மற்றும் அதற்கான வட்டித் தொகையும் சேர்த்து) ஈடான இந்திய அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்ற உள்ளதாக மிரட்டி வருகிறது. இதன் மூலம் இந்திய அரசை விரைவில் நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பைச் செயல்படுத்த நிர்ப்பந்தம் செய்கிறது.
அமெரிக்க நிறுவனம்
ஒரு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அரசு சொத்துக்களை ஒரு நிறுவனம் கைப்பற்ற முடியுமா என்றால் இதற்குப் பதில் முடியும் என்பது தான்.
அமெரிக்கா எண்ணெய் நிறுவனமான ConocoPhillips மற்றும் வெனிசூலா அரசு எண்ணெய் நிறுவனமான PDVSA மத்தியிலான வழக்கில் ConocoPhillips வெற்றிபெற்று 2 பில்லியன் டாலர் மதிப்பிலான நஷ்டஈடு அளிக்க 2019ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் வெனிசூலா அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றியது ConocoPhillips. இதைத் தொடர்ந்து PDVSA நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு உரியத் தொகையைக் கொடுத்தது.
கெய்ர்ன் எனர்ஜி
இதேபோல் 10,427 கோடி ரூபாய் மதிப்பிலான வரி நிலுவை குறித்துக் கெய்ர்ன் எனர்ஜி மீது இந்திய அரசு தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புத் தற்போது வந்துள்ளது. இந்நிலையில் கெய்ர்ன் நிறுவனம் அரசு விற்பனை செய்த தனது பங்குகளையும், கைப்பற்றிய ஈவுத்தொகை, வரி ரீபென்ட் ஆகியவற்றைத் திரும்ப அளிக்கக் கோரியுள்ளது.
சொத்து கைப்பற்றல்
இந்த வழக்கில் இந்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியான நிலையில் கெய்ர்ன் எனர்ஜி வெற்றிபெற்றுள்ளது. இதனால் கெய்ர்ன் எனர்ஜி தனக்கு கிடைக்க வேண்டிய 1.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை விரைவில் அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் இந்நிறுவனம் வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிக் கணக்குகளையும், விமானங்கள், இதர வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதில் இறங்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய அரசுக்குக் கடிதம்
இதுகுறித்து கெய்ர்ன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்துவிட்டது, எங்களது நிறுவன முதலீட்டாளர்கள் இந்தத் தீர்ப்புக்கான தீர்மானத்தை விரைவில் கொண்டு வர விரும்புகின்றனர் என இந்நிறுவனம் லண்டனில் இருக்கும் இந்திய உயர் கமிஷ்னருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதோடு இந்தக் கடிதத்தைப் பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியியல் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது கெய்ர்ன் இந்தியா.
வாய்ப்புகள் குறைவு
கெய்ர்ன் எனர்ஜி மற்றும் இந்திய அரசு மத்தியிலான வழக்கில் நடுவர் தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள தீர்ப்பை நிறைவேற்றாத பட்சத்தில், இந்திய அரசு சர்வதேச சட்டதிட்டங்களை மீறுவதாகப் பொருள். மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் இந்திய அரசுக்கு சாதகமான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரிகிறது.