இந்தியாவில் தற்போது E20 எனப்படுக் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்கப்படுகிறது. நம்முடைய அனைத்து வாகனங்களுக்கும் எத்தனால் கலந்த பெட்ரோலையே நாம் பயன்படுத்துகிறோம். எத்தனால் பெட்ரோல் தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு புது பிரச்சினை தற்போது உருவெடுத்துள்ளது.
எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் கோழி தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முட்டையின் விலை 35% முதல் 40% வரை அதிகரித்துள்ளது என எக்கனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

மக்காச்சோளம் பயிர்கள் உயிரி எரிபொருள் தயாரிக்கும் ஆலைகளுக்கு பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பொதுவாக மக்காச்சோளம் தான் கோழிகளுக்கு முக்கிய தீவனமாக வழங்கப்படுகிறது. இவை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு கோழி தீவனங்களின் உற்பத்தி செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு தோராயமாக 4 முதல் 4.50 ரூபாய் வரை இருந்தது. ஆனால், தற்போதைய தீவன விலை உயர்வால் அது 5.20 முதல் 5.50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் நேரடி தாக்கமாக சில்லறை விற்பனை சந்தையில் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் முட்டை விலை 35-40% வரை உயர்ந்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவிக்கிறது.
வட மாநிலங்களில் பண்ணைகளிலேயே ஒரு முட்டை விலை 7 ரூபாய் என்ற விலையை எட்டியுள்ளதாம்.தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கலில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5.20 ரூபாயாக விற்கப்படுகிறது. இனி வரும் காலம் குளிர்காலம், இந்த காலக்கட்டத்தில் வழக்கமாகவே முட்டை தேவை அதிகமாகி விலை உயரும். தற்போது தீவன தட்டுப்பாடும் நிலவுவதால் இன்னும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மக்காசோளத்தில் 37% எத்தனால் உற்பத்திக்கு செல்வதால் சந்தையில் ஒரு டன் மக்கா சோளம் விலை 14,000 ரூபாயில் இருந்து 26,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.தீவன விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சிறு மற்றும் நடுத்தர கோழி பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செலவை குறைக்க சில விவசாயிகள் முட்டையிடும் கோழிகளை முன்கூட்டியே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் முட்டை தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த ஒரு உணவு. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக முட்டை வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் தற்போது புரோட்டீனுக்காக முட்டை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. இந்த சூழலில் முட்டை விலை உயர்வு நேரடியாக சாமானிய மக்களின் ஊட்டச்சத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே எத்தனால் உற்பத்தியால் சர்க்கரை விலை உயர்ந்த நிலையில் முட்டை விலை உயர்ந்து வருவது மக்களுக்கு கலக்கத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications

