இன்சூரன்ஸ் என்பதை இன்றும் பலர் வீணான ஒரு செலவாகத் தான் நினைக்கின்றனர். இன்னும் சிலர் முதலீடு இன்சூரன்ஸ் இரண்டும் ஒன்று என நினைக்கின்றனர். அது தவறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலானவர்கள் இன்சூரன்ஸ் என்றாலே அதில் பாதுகாப்பு மட்டுமல்ல, அதேசமயம் முதலீடாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் இன்சூரன்ஸ் என்பதை ஒரு பாதுகாப்பு அம்சமாகவே பார்க்க வேண்டும் என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு கொடுக்கும் இன்சூரன்ஸ்
உதாரணத்திற்கு ஒரு குடும்பத் தலைவர் ஏதோவொரு காரணத்தினால் இறந்துபோகின்றனர். இது தவிர்க்க முடியாத பெரிய இழப்பு. எனினும் அவர் போட்டு வைத்த இன்சூரன்ஸ் என்பது அந்த குடும்பத்து ஒரு பாதுகாப்பாக அமைக்கின்றது. ஆனால் அவர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் இது வீண் செலவு என பலரும் நினைக்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத் தலைவர் என்பவர் ஒரு குடும்பத்தில் இல்லையெனில் அந்த குடும்பம் என்னவெல்லாம் பிரச்சனையை சந்திக்கும் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
இன்சூரன்ஸ் செலவு இல்லை
ஆக இன்சூரன்ஸ் போடுவதை செலவாக எண்ணி கஞ்சத்தனமாக இருப்பதை காட்டிலும்., அதனை எடுக்கும்போது செலவு குறைவாக இருப்பதாக தேர்வு செய்யலாம்.
இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு போர்ட்போலியோவில் நிபுணர்கள் கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பலரும் முதலீடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவதத்தினை இன்சூரன்ஸ்களுக்கு கொடுப்பதில்லை.
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பினையும் கொடுத்து, முதலீடும் செய்யும் வகையில் இருக்கும் பல பாலிசிகளும் கிடைக்கின்றன. இதனை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் எல் ஐ சி-யின் வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் என்ற வரிகள் மூலம் புரிந்து கொள்ளலாம். ஆக வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் பாதுகாப்பினை கொடுப்பது இன்சூரன்ஸ் தான்.
பல வகையான பாலிசிகள்
அப்படி எடுக்கும்போது அடுத்த கேள்வி? எந்த மாதிரியான பாலிசி எடுப்பது? அது என்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, டெர்ம் இன்சூரன்ஸ், ஆயுள் காப்பீடு, மணி பேக் பாலிசி என பல வகையான பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம்.
இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி முழுமையாக அடுத்த பதிவில் பார்க்கலாம். எனினும் இப்படி இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
க்ளைம் எப்படி செய்யப்படுகின்றது?
பொதுவாக ஒரு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுக்கும்போது, முதலில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், க்ளைம் சரியாக செய்யப்படுகின்றதா? அது எந்தளவுக்கு செய்யப்படுகின்றது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு எடுக்கலாம். அதோடு ஒரு இன்சூரன்ஸ் எடுக்கும் போது கொடுக்கும் ஃபார்ம் ஆகட்டும், க்ளைம் செய்யும்போது கொடுக்கும்போது தெளிவாக பிழைகள் இன்றி சரியாக கொடுக்க வேண்டும்.
சரண்டர் செய்யலாம்?
ஒரு வேளை பாலிசி எடுத்த பிறகு நீங்கள் தவறான ஒன்றை எடுத்து விட்டதாக நினைத்தால் கூட, அதனை குறிப்பிட்ட காலத்தில் சரண்டர் செய்து கொள்ளலாம்.
சில சமயங்களில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மூலம் பாலிசிகளை எடுக்கும்போது, அவர்கள் சில சமயங்களில் முழு விவரங்களை சொல்லியிருக்க வாய்ப்பிருக்காது. அவர்களுக்கு எது பலனாக இருக்குமோ? அதனை பற்றி கூறியிருக்கலாம். அல்லது ஒரு பாலிசியில் உள்ள நல்ல விஷயங்களை பற்றி கூறாமல் மறந்தும் கூட விட்டிருக்கலாம்.
முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்?
ஆக நீங்கள் ஏஜெண்டுகளிடமே பாலிசி எடுத்தாலும் கூட, அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு எடுக்கலாம். அது நிறுவனத்திடம் நேரடியாக சென்றும் தெரிந்து கொள்ளலாம். இல்லையேல் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். பல பாலிசிகளை ஒப்பிட்டு பார்த்து பெற்றுக் கொள்ளலாம்.