தெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இப்போது போர் வருமா என்பதுதான் உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, அமெரிக்காவால், கொல்லப்பட்டதையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தான் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
ஆனால், இரு நாடுகளிடையே போர் நடைபெறுவதற்கு, கோபமும், ஆத்திரமும்.. அவ்வளவு ஏன்? ராணுவ பலமும் மட்டும் இருந்தால் போதாது. பொருளாதார பலம் என்பது மிக மிக அவசியம்.
உலகின் பெரிய அண்ணனாக அமெரிக்கா இருக்க காரணம், அதன் ராணுவ பலம் மட்டும் கிடையாது. அதைத் தாங்கிப் பிடிக்க கூடிய பொருளாதார பலம். இந்த இடத்தில்தான் ஈரான் பின்னடைவைச் சந்திக்கின்றது. அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு, ஈரானின் பொருளாதார பலம் ஒத்துழைக்குமா? அதுகுறித்த ஒரு பார்வை:
பொருளாதார மந்த நிலை
அணு ஆயுதம் வைத்திருப்பதாக கூறி அமெரிக்காவின் வற்புறுத்தலால், சர்வதேச சமூகம், ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்படி அணுஆயுத பயன்பாட்டை குறைப்பதாக, வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, பொருளாதார தடை தளர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து பொருளாதாரத் தடையை இறுக்கமாக்கினார்.
கச்சா எண்ணை
உலகத்திலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் நான்காவது பெரிய நாடு ஈரான். கச்சா எண்ணெய் விற்பனையை வைத்துதான் அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசின் வருமானம் இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை உள்ளிட்ட காரணங்களால், ஈரானின், கச்சா எண்ணெய் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. பல நாடுகள் அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை தவிர்க்க தொடங்கியுள்ளன. இதுதான் ஈரானின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
ஏற்றுமதியைவிட இறக்குமதிி அதிகம்
சர்வதேச நிதியக, கணக்கீட்டின்படி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் இறக்குமதி என்பது ஏற்றுமதி அளவை விட அதிகமாக இருக்க போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அதன் எண்ணெயை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதுதான்.
டாலருக்கு எதிரான ரியால்
அமெரிக்கா உடனான பதட்டங்களுக்கு மத்தியில், இந்த மாதம் ஒரு டாலருக்கு எதிரான ஈரானின் பண மதிப்பு 140,000 ரியால்களாக பலவீனமடைந்துள்ளதாக, அந்நிய செலாவணி வலைத்தளமான போன்பாஸ்ட்.காம் தெரிவித்துள்ளது. பலவீனமான பணமதிப்பால், ஈரானில் பணவீக்கம், அதிகரித்துள்ளது. 2019 மே மாதத்தில் 52% ஆக பண வீக்கம் உயர்ந்ததாக உலக வங்கி கூறியுள்ளது. ஈரானில் பெரும் விலைவாசி உயர்வுக்கு இது காரணமாக அமைந்துள்ளது.
நேரடி போர் வாய்ப்பு
வேலை வாய்ப்புகள் இல்லாததால் ஈரானில் வறுமை மோசமான நிலைக்கு செல்லக்கூடும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது 2013ல் 8.1% மாக இருந்தது, 2016ல் 11.6% ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஈரான் நேரடி போரில் ஈடுபடும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். சிரியா மற்றும் ஏமனில் இருந்து ஆப்கானிஸ்தான்வரை நீண்டு, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள, ஈரான் ராணுவத்தின் கிளை அமைப்புகள், அமெரிக்க ராணுவத்தை இலக்கு வைக்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.