சில நேரம் செய்திகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் திருப்பிச் செலுத்தாமல் தப்பித்து விட்டதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு தனிநபர் அதேபோல் தன் கடனை செலுத்தாமல் விட்டால் என்ன நடக்கும்? கடன் பெற்ற ஒருவர் சட்டரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
உங்களுடைய கடன் எப்போது டீஃபால்ட் ஆகும்?: நீங்கள் பெற்ற கடனை உரிய தேதியில் செலுத்தவில்லை என்றால் அதை டீஃபால்ட் என்று கூறுவார்கள். மேலும் நீங்கள் வாங்கிய கடனுக்கான EMI-ஐ 90 நாட்கள் செலுத்தாமல் இருந்தால் வங்கிகள் உங்கள் கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து விடும். இப்படி இருக்கும் பட்சத்தில் சர்ஃபேசி சட்டம் 2002-இன் பிரிவு 13(2)-இன் கீழ் வங்கிகள் ஒரு நோட்டீசை அனுப்பும். அதிலிருந்து 60 நாட்களுக்குள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது டெப்ட் ரெக்கவரி ட்ரிபுனல் என்று சொல்லப்படுகிற கடன் மீட்பு தீர்ப்பாயத்தை வங்கிகள் அணுகும்.

பிணையம் இல்லாத கடன் பெற்றிருந்தால் என்ன நடக்கும்?: தங்கக் கடன், ஹோம் லோன் போன்றவற்றுக்கு பிணயமாக நகை அல்லது சொத்து பத்திரத்தை வழங்க வேண்டும். ஆனால் கிரெடிட் கார்டு கடன், பர்சனல் லோன் போன்றவை பிணையமில்லாமல் வங்கிகள் தரும் கடனாகும்.
இப்படி பிணையம் இல்லாமல் கடன் வாங்கியவர், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கும்போது அவர் திவாலானவராக அறிவிக்கப்படுவார். அதற்காக இந்தியாவில் "Insolvency and Bankruptcy 2016" என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் கடன் பெற்று விட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் வங்கிகளிடம் கடனை திருப்பி செலுத்துவதற்கான வழிகளை கூறலாம். அந்த வழிகளை வங்கிகள் ஏற்கவில்லை என்றால் அவர் திவாலானவராக கருதப்படுவார் என்று எக்கனாமி கிளாஸ் பிரக்டிஸ் அமைப்பின் மூத்த வழக்கறிஞரான முகேஷ் சந்த் கூறியுள்ளார்.
பிணயமாக வைத்த மற்ற சொத்துக்களின் மூலம் கடனை வசூலிக்க முடியுமா? கண்டிப்பாக முடியும். சிவில் நீதிமன்ற தீர்ப்பு அல்லது கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் இருந்தால் போதும் வங்கிகளுக்கு நீங்கள் பிணயமாக வைத்த சொத்தை ஏலம் விட்டு அதன் மூலம் கடனை பெற்றுக் கொண்டு மீதி பணத்தை உங்களிடம் ஒப்படைக்க அதிகாரம் உண்டு.
பிணையம் இல்லாமல் எவ்வளவு கடன் பெறலாம்?: பிணையம் இல்லாத கடனுக்கான வரம்பு என்பது அவரவரின் நிதி நிலையைப் பொறுத்தது. ஒருவர் பெரும் சம்பளம், அவர் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவாரா?, ஏற்கனவே வாங்கிய கடனை எப்படி செலுத்தி இருக்கிறார்?, கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்த தொகை தீர்மானிக்கப்படுகிறது.
கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஒருவர் என்ன செய்யலாம்?: வழக்கறிஞர் மலக் பட் கூற்றுப்படி, கடன் வாங்கிய ஒரு நபர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் போது வங்கிகளிடம் பேசிப் பார்க்கலாம். அதன் அடிப்படையில் வங்கிகள் தொகையை குறைத்துக் கொண்டு வசூல் செய்யலாம் அல்லது வட்டியை குறைக்கலாம்.
வங்கி கடன் பெற்றவரின் நிலையை ஏற்றுக் கொண்டால் மீதி தொகையை ஒரே தவணையாக செலுத்தி கடனை முடிக்கலாம். ஆனால் இப்படி செய்வது கடன் பெற்றவரின் சட்டப்பூர்வ உரிமை கிடையாது. கடனாளியின் நிதி நிலை, அவர் ஏன் இந்த நிலையில் இருக்கிறார் என்பதை எல்லாம் வங்கிகள் பார்த்து முடிவு செய்யும்.
உதாரணமாக ஒரு நபர் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.. தன்னிடம் ரூ.3 லட்சம் மட்டும் தான் இருக்கிறது. அதை மட்டும் தான் அடைக்க முடியும் என்று சொன்னால் வங்கிகள் அவரிடம் பிற சொத்துக்கள் இருக்கிறதா? என்பதை பார்க்கும். நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஒன்றுமே செய்ய முடியாது. அந்த நபரால் ரூ.3 லட்சத்திற்கு மேல் பணம் தர முடியாது என்று முடிவு செய்துவிட்டால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் வங்கிகள் ஏற்றுக் கொண்டால்தான் உண்டு.
கடனைத் திருப்பி அடைக்காவிட்டால் ஜெயில் தண்டனை கிடைக்குமா?: கடனை செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும். கிரெடிட் ஸ்கோர் குறையும். வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர் என வங்கிகளின் மூலம் வகைப்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே பணம் இல்லாத காரணத்தினால் ஒருவரை சிறையில் அடைக்க முடியாது.


Click it and Unblock the Notifications
