ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது சம்பளம் பெறும் தனி நபர்கள் தங்கள் ஓய்வுக்காக சேமிக்கும் ஒரு திட்டம். இன்னும் பல குடும்பங்களுக்கு இதுவே முதன்மை சேமிப்பாக இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் வாங்கும் சம்பளம் செலவுக்கே போதாமல் இருக்கும் நிலைதான் இருக்கிறது. அப்படி இருக்கையில் நிறுவனங்களே பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை வங்கி கணக்கில் போடுவதால் சிலருக்கு இந்தத் தொகையே பிற்காலத்தில் பேருதவியாய் மாறிவிடுகிறது.
சிலர் பல ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய ஈபிஎஃப் கணக்கில் இருக்கும் பிஎஃப் தொகை சற்று கூடுதலாகவே இருக்கும். அப்படி பெருந்தொகையை சேமிப்பில் வைத்திருப்பவர்கள் வீட்டுக் கடன் வாங்கி இருந்தால் அதை பயன்படுத்திக் கடனை அடைத்து விடலாமா? என்று கூட நினைப்பார்கள். இது ஒரு சிறந்த வழி தான். ஆனால் இதற்கும் சில நிபந்தனைகள் இருக்கிறது.

ஈபிஎஃப் பணத்தை எப்போதெல்லாம் பெற முடியும்?: உங்கள் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்த பிஎஃப் பணத்தை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கண்டிப்பாக அந்த உறுப்பினர் குறைந்தபட்ச 3 ஆண்டுகள் சேவை புரிந்தவராக இருக்க வேண்டும். அதேபோல அவர் வாங்கிய சொத்து, நிலம் அல்லது வீடு அந்த உறுப்பினரின் பெயரிலோ அல்லது மனைவியின் பெயரிலோ இருக்க வேண்டும் அல்லது இருவரின் பெயரிலும் இருக்கலாம். ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் தான் உங்களால் பிஎஃப் பணத்தை வைத்து கடனை அடைக்க முடியும்.
எவ்வளவு பணம் எடுக்கலாம்?: மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 90 சதவீதம் வரை வங்கி கடனை அடைப்பதற்கு எடுத்துக் கொள்ள முடியும்.
ஆன்லைன் மூலம் ஈபிஎஃப் தொகையை திரும்பப் பெறுவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 2: UAN விவரங்களை வழங்கி லாகின் செய்யவும். உங்களுடைய ஆதார் நம்பர், பான் நம்பர், வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். பின்னர் "ஆன்லைன் சர்வீசஸ்" என்ற பகுதிக்கு சென்று "கிளைம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: எதற்காக பிஎஃப் பணத்தை எடுக்கிறீர்கள்? என்ற சரியான காரணத்தை தேர்ந்தெடுத்து தேவையான தொகையை குறிப்பிடவும். பின்னர் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் இதர ஆவணங்களை அப்லோட் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
ஈபிஎஃப் பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனை அடைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?: பிஎஃப் பணத்தை வைத்து வீட்டுக் கடனை செலுத்தும்போது மாதத் தவணை குறையும். அதோடு நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி சுமையும் குறையத் தொடங்கும்.
சிலர் வீட்டுக் கடனை அடைப்பதற்காகவே பர்சனல் லோன் பெறுவார்கள். இதனால் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ குறையும். பர்சனல் லோனுக்கு ஈஎம்ஐ செலுத்த வேண்டும். இப்படி எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் பணத்தை பயன்படுத்தினால் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும்.
ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் பணத்தை எடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்?: பிஎஃப் பணம் முதன்மையாக ஓய்வு காலத்துக்காகவே சேமிக்கப்படுகிறது. இதிலிருந்து பெரிய தொகையை எடுப்பதால் பணி நிறைவுக்கு பின்னர் உங்கள் சேமிப்பு குறைவாக இருக்கும். மேலும் நீங்கள் எடுத்த பணத்திற்கு வட்டி கிடைக்காது. இதனால் வட்டி வருமானம் தடைபடும். வங்கி கடனை அடைப்பதற்காகவே பெரும்பங்கு எடுத்து விட்டால் பிற்காலத்தில் ஏற்படும் அவசர தேவைகளுக்கு பணம் இல்லாமல் போய்விடும். எனவே வீட்டுக் கடனை அடைப்பதற்காக பிஎஃப் பணத்தை எடுத்தாலும் வேறு ஏதேனும் சேமிப்பில் ஓய்வுக்கு பங்களிப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications
