காபி என்பது இந்தியர்கள் மிகவும் விரும்பி அருந்தும் ஒரு பானம் என்பதும் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு உள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்தியர்களின் காபி தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பல இந்திய காபி தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு சில வெளிநாட்டு காபி நிறுவனங்களும் உள்ளன.
அந்த வகையில் தற்போது ஒரு கனடா நிறுவனம் இந்திய காபி சந்தையில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா காபி நிறுவனம்
கனடா நாட்டில் பல ஆண்டுகளாக காபி தொழிலில் புகழ்பெற்று விளங்கும் நிறுவனம் டிம் ஹார்டன்ஸ். இந்நிறுவனம் கனடா மட்டுமின்றி அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளிலும் தனது காபி சந்தையை விரிவுபடுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவிலும் காபி கடையை திறக்க வேண்டும் என்பதற்காக இந்நிறுவனம் ரூ.240 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 120 காபி கடைகளை திறக்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 120 கடைகள்
டிம் ஹார்டன்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நவின் குர்னானி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 240 கோடி முதலீட்டில் 120 கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைக்கு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடையை திறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல் கடை
மேலும் கனடா நாட்டின் காபி நிறுவனமான டிம் ஹார்டன்ஸ் தனது முதல் கடையை டெல்லியில் தொடங்க இருப்பதாகவும் அதனை அடுத்து டெல்லி என்சிஆர் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும் கடையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி-பஞ்சாப்
இதுகுறித்து நவின் குர்னானி மேலும் கூறியபோது, 'வட இந்தியாவில் 10 இடங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் காபி கடைகள் திறக்கப்படும் என்றும், அதே போல் டெல்லி என்.சி.ஆர் மற்றும் பஞ்சாபிலும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக பெருநகரங்களிலும் அதனை அடுத்து சிறு நகரங்களிலும் கவனம் செலுத்த உள்ளோம் என்றும் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் எங்கள் கடைகளை விரிவுபடுத்துவது எங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டிம் ஹார்டன்ஸ்
இந்தியாவில் ஏற்கனவே 350க்கும் மேற்பட்ட பல்வேறு பிராண்டுகளின் காபி உற்பத்தி நிறுவனங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவில் எங்கள் நிறுவனத்தையும் விரிவுபடுத்த விரும்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார், இந்தியா மட்டுமின்றி சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் எங்கள் சந்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளோம் அவர் கூறினார்.
இந்திய காபி சந்தை
டாடா குழுமம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் காபி சந்தையில் இருக்கும் நிலையில் தங்களது நிறுவனத்தையும் இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும், இந்திய காபி சந்தை இன்னும் அதிக அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நவின் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காபி சந்தை சுமார் 20 சதவீதம் உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
850 மில்லியன் டாலர்
2025ஆம் ஆண்டுக்குள் 850 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின் காபி சந்தை இருக்கும் என்றும் எனவே டிம் ஹார்டன்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக இருக்கும் என்றும் இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதிக அளவு முதலீடு செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிம் ஹார்டன்ஸ்
டிம் ஹார்டன்ஸ் நிறுவனம் கனடாவின் டொரண்டோ நகரில் கடந்த 1964ஆம் ஆண்டு ஹாக்கி வீரர் டிம் ஹார்டன் மற்றும் ஜிம் சாரடே ஆகியோரால் தொடங்கப்பட்டது. அது முதல் இன்று வரை கனடா உள்பட பல்வேறு நாடுகளில் காபி தயாரித்து விற்பனை செய்வதில் இந்நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 15 நாடுகளில் 4,949 உணவகங்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய நிறுவனமாக டிம் ஹார்டன்ஸ் விளங்குகிறது.