உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் மற்றும் அதன் மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு முழுக்கச் சர்வதேச விமான நிறுவனங்களின் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்து, நிதிநெருக்கடியிலும், ஆட்குறைப்பிலும் ஈடுபட்டது. இந்தச் சூழ்நிலையில் 2021ல் விமானப் போக்குவரத்து சந்தை மீண்டு வரும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் CAPA அமைப்பு ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு அமைப்பான சென்டர் பார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் 2021ஆம் ஆண்டும் விமானப் போக்குவரத்துக்கான டிமாண்ட் இருக்காது. இதனால் தொடர்ந்து மந்தமாகவே இருக்கும், குறிப்பாகச் சர்வதேச விமானப் போக்குவரத்து பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாமல் தொடர்ந்து மந்தமான வர்த்தகச் சூழ்நிலையைப் பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக் கணிப்பு
2021ல் வெளிநாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் 2020 வர்த்தகத்தில் 35 முதல் 40 சதவீதமும், உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 70 முதல் 80 சதவீதம் மட்டுமே மீட்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு விமானச் சேவை பிரிவுக்குக் கிடைக்கும் வர்த்தகம் மிகவும் குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது.
கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்
மேலும் கொரோனாவுக்கு முன்பு மொத்த விமானப் போக்குவரத்துச் சந்தையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சுமார் 55 சதவீதத்தைக் கைப்பற்றி இருந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்கு அதிகளவில் விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பெருமளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது.
மக்கள் வருகை
இன்னும் பல நாடுகளில் விமானப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், மக்களின் வருகை குறைந்திருக்கும் காரணத்தால் தடுப்பு மருந்து உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்த பின்பே இந்த நிலை மாறும் எனவும் சென்டர் பார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.