இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வர்த்தகச் சரிவில் இருந்து தப்பித்த துறைகளில் மிகவும் முக்கியமானது ஐடி துறை. 2020ல் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் அடையாமல், எப்போது இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தையும் பெற்று அசத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக 2020ன் பிற்பகுதியிலும், 2021ஆம் ஆண்டிலும் இந்திய ஐடி துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்குச் சாதகமாக அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள பைடன் அரசு டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகளை அடுத்தடுத்து ரத்துச் செய்து வருவது அமெரிக்கச் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தை வைத்திருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் ஐடி நிறுவனமான கேப்ஜெமினி முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐடி துறை நிறுவனங்கள்
கொரோனா பாதிப்புக் காரணமாக உலகளவில் நிறுவனங்கள், தொழிற்சாலை, சேவைத் துறை நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவைகள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதன் எதிரொலியாக ஐடி நிறுவனங்கள் 2020ல் கொரோனா தொற்று காலத்திலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
கேப்ஜெமினி அசத்தல்
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னணி ஐடி சேவை மற்றும் கன்சல்டிங் நிறுவனமான கேப்ஜெமினி தனது இந்திய வர்த்தகப் பிரிவில் மட்டும் இந்த 2021ல் சுமார் 30,000 ஊழியர்களைப் புதிதாகப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஇஓ அஷ்வின் யார்டி
30,000 புதிய ஊழியர்கள் இலக்கு என்பது நிறுவனத்தின் வருமான மற்றும் வர்த்தக வளர்ச்சியைக் காட்டுகிறது, மேலும் 2021ல் கேப்ஜெமினியின் வருவாய் வளர்ச்சி 7 முதல் 9 சதவீதமாக இருக்கும் என்று இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் யார்டி தெரிவித்துள்ளார்.
30,000 புதிய ஊழியர்கள்
மேலும் கேப்ஜெமினி தற்போது அறிவித்துள்ள 30,000 புதிய ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் பிரஷ்ஷர்கள் அதாவது கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களையும், மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
1,25,000 ஊழியர்கள்
பிரான்ஸ் நிறுவனமான கேப்ஜெமினி உலகளவில் சுமார் 2,70,000 ஊழியர்களை வைத்து வர்த்தகம் செய்து வந்தாலும், இந்தியாவில் மட்டும் 1,25,000 ஊழியர்களை வைத்து மிகப்பெரிய வர்த்தகத் தளத்தை அமைத்துள்ளது. கடந்த வருடம் கேப்ஜெமினி இந்தியா 24,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்திய நிலையில், 2021ல் 30,000 ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப திறன்
மேலும் இந்த வருடம் புதிதாகப் பணியில் சேர்க்கப்படும் ஊழியர்கள் பெருமளவில் டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் எனவும், குறிப்பாகக் கிளவுட், இன்ஜினியரிங், ஆராய்ச்சி, மற்றும் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, 5ஜி, எட்ஜி கம்பியூட்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகிய பிரிவில் இருக்கும் எனத் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் யார்டி தெரிவித்துள்ளார்.
65 சதவீத வருமானம்
65 சதவீத வருமானம் கேப்ஜெமினி நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 65 சதவீத வருமானம் டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவையில் இருந்து வரும் காரணத்தால் இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்தப் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்களில் அதிகமானோர் இவ்விரு தொழில்நுட்பத்தில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்போசிஸ் மற்றும் காக்னிசென்ட்
இந்திய ஐடித்துறையில் முதல் இடத்தைப் பிடிக்கப் போராடும் இன்போசிஸ் 2021-22 நிதியாண்டில் மட்டும் சுமார் 24,000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதேபோல் காக்னிசென்ட் நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் 35 சதவீதம் அதிகமாகச் சுமார் 23,000 ஊழியர்களைப் புதிதாகப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.