உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர. அது குறைவதாக தெரியவில்லை. இதனால் உலகின் ஓட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ளது எனலாம்.
இது தான் இப்படி எனில் தொழில் துறைகளும், நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தினை குறைக்கவும், ஈடுகட்டவும், ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் சம்பளத்தில் குறைப்பு செய்து வருகின்றன.
இதற்கிடையில் பிரான்சினை சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனம், இந்த ரணகளத்திலும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி
உலகின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனமான கேப் ஜெமினி, தகவல் தொழில்நுட்ப துறை சேவைகள், கிளவுட் சர்வீசஸ், டிஜிட்டல் சேவைகள் மற்றும் பல தொழில் முறை சேவைகளை வழங்கி வருகிறது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், 2,70,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்படி உலகின் அனைத்து பகுதிகளிலும், பல துறைகளிலும் தங்களது சேவையினை அளித்து வரும் கேப்ஜெமினி நிறுவனம் தான், தற்போது இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியினை தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.
ஊழியர்களின் நலன் கருதி நடவடிக்கை
பல நிறுவனங்களில் பணி நீக்கம் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கேப்ஜெமினி அதன் ஊழியர்களின் நலன் கருதி இப்படி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியா பணியாளர்கள் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களுக்கு, ஏப்ரல் மாதத்தில், ஒற்றை இலக்கில் உயர்வை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது மிக நல்ல விஷயம்
இதே மற்றவர்களுக்கு ஜூலை 1 முதல் இந்த அதிகரிப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதோடு பெஞ்ச் ஊழியர்களுக்கும் எந்தவித காலக்கெடுவும் விதிக்காமல் அவர்களின் சம்பளத்தினை செலுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகள் கூறுகின்றன. நாட்டில் நிலவி வரும் இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் இப்படி நடவடிக்கை பாரட்டதக்க விஷயம் தானே.
ஊதிய குறைப்பு இல்லை
இது குறித்து கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் யார்டி, நாங்கள் எந்த ஊழியர்களுக்கும் சம்பள குறைப்பு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் ஏ மற்றும் பி தர ஊழியர்களுக்கும் (சுமார் 84,000 பேர்) உயர்வு கிடைத்துள்ளது. மற்றவர்கள் எங்கள் திட்டங்களுக்கு ஏற்ப ஊதிய உயர்வினைப் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அவசர மருத்துவ செலவு
மேலும் இந்த பதவி உயர்வானது ஜூலை 1 முதல் செயல்படும். மார்ச் மாத ஊதியத்துடன் ஊழியர்களுக்கான சம்பளம் மாறியுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டும் இந்திய ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், மருத்துவ அவசர நிலைக்கும் பயன்படுத்தும் விதமாக 25 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவுடன் போராடுபவர்களுக்கு உதவி
அதோடு ஊழியர்களின் உதவியுடன் மருத்துவ பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள் என கொரோனாவுடன் போராடும் முன்னணி ஊழியர்களுக்கு தேவையான பேஸ் மாஸ்க் மற்றும் மற்ற மருத்துவ பொருட்கள் வாங்க உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது. கேப்ஜெமினி CSR partners உடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.