சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை மாறியுள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் 2021ஆம் ஆண்டில் 2வது முறையாகக் கார் மற்றும் பைக் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.
இதன் மூலம் இந்தியாவில் லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் விற்பனை இந்த விலை உயர்வு காரணமாக மீண்டும் மந்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
முக்கியக் காரணங்கள்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை, உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு, உலோகத்தின் விலை ஆகியவற்றுடன், உலக நாடுகள் ஓரே நேரத்தில் வேகமாகக் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார வளர்ச்சி அளவீட்டைத் தொட முயற்சி செய்து வரும் காரணத்தால் உலகளவில் தற்போது தேவையான அளவிற்குப் பொருட்கள் விநியோகம் செய்யமுடியாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கார் பைக்குகளின் உற்பத்தி விலை
இந்தக் காரணத்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும் கார் மற்றும் பைக்குகளின் உற்பத்தி விலை அதிகரித்து உள்ளது. பொதுவாகச் சில சதவீத விலை உயர்வை ஆட்டோமொபைல் நிறுவனம் ஏற்கும், ஆனால் தற்போது இந்த அளவீட்டைத் தாண்டியிருக்கும் காரணத்தால் கார் மற்றும் பைக் விலை உயர்த்தும் கட்டாயத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலை
இந்நிலையில் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி அடுத்த மாதம் முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. மேலும் விலை உயர்வு ஒவ்வொரு மாடல்களுக்கும் மாறுபடும் எனத் தெரிவித்துள்ளது. இந்த 2வது விலை உயர்வுக்கு, உற்பத்தி பொருட்களில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வு தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி அறிவிப்பு
மேலும் மாருதி சுசூகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில வருடங்களாக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, இந்நிலையில் இந்த விலைவாசி உயர்வின் சில சதவீதம் வாடிக்கையாளர்களிடம் இருந்து விலை உயர்வின் வாயிலாக ஈடு செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் வருகிற ஏப்ரல் 2021 முதல் கார்களின் விலை உயர உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சரக்கு போக்குவரத்துச் செலவுகள்
உற்பத்தி பொருட்களின் விலை உயர்வைத் தாண்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்பட்டுள்ள உயர்வு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்துச் செலவுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் பிற உற்பத்தி நிறுவனங்களை அதிகளவில் பாதித்துள்ளது.
நிஸ்ஸான் இந்தியா
இந்நிலையில் அடுத்த சில நாட்களில் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி நிறுவனத்தைத் தொடர்ந்து நிஸ்ஸான் இந்தியாவும் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு
கார் உற்பத்தி நிறுவனங்களைப் போலவே இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதே ஏப்ரல் மாதம் முதல் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஹீரோ மோட்டோகார்ப் வாடிக்கையாளர்களை அதிகம் பாதிக்காத வகையில் விலையை உயர்த்த முயற்சி செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.