இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காரணத்தால் கார், பைக் மற்றும் பிற வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மே மாசம் ரொம்ப மோசம்
இதன் வாயிலாக ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் மே மாதத்தில் நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனை சந்தையில் வர்த்தக அளவீடுகள் சுமார் 55 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வர்த்தகச் சரிவுக்குக் கொரோனா தொற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் தான் முக்கியக் காரணமாக உள்ளது.
வாகன விற்பனை எண்ணிக்கை
மே மாதத்தில் நாடு முழுவதும் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை என்பது 535,855 மட்டுமே, இது ஏப்ரல் மாதத்தில் 11.8 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தகப் பாதிப்பால் மொத்த ஆட்டோமொபைல் சந்தையும் முடங்கியுள்ளது.
கடுமையான வர்த்தகப் பாதிப்பு
மே மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை அளவு 53 சதவீதம் சரிந்து 410757 வாகனங்களும், கார் விற்பனை 59 சதவீதம் சரிந்து 85,733 வாகனங்களும், வர்த்தக வாகனங்கள் பிரிவில் 66 சதவீத சரிவுடன் 17,534 வாகனங்களும், 3 சக்கர வாகனங்கள் பிரிவில் 76 சதவீத சரிவுடன் 5215 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
முதல் கொரோனா அலை
முதல் கொரோனா தொற்று அலையில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் நகரங்களில் மட்டுமே வாகன விற்பனை என்பது குறைவாக இருந்தது, பருவமழை சிறப்பாக இருந்த காரணத்தால் கிராமம், ஊரகப் பகுதிகளில் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால் 2வது லாக்டவுன் காலத்தில் கிராமம், ஊரகப் பகுதிகளில் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது.
தொழிற்சாலைகள் மூடல்
மே மாதம் மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு, எம்ஜி மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தொற்றுக் காரணமாகத் தொழிற்சாலையைப் பல வாரங்கள் தற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதம் நிம்மதி
தொழிற்சாலை மூடப்பட்டாலும் பயணிகள் வாகன பிரிவில் 20-25 நாட்களுக்குத் தேவையான இருப்பும், இரு சக்கர வாகன பிரிவில் 25 முதல் 30 நாட்களுக்கான இருப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.