இந்திய பொருளாதாரத்தையும், வர்த்தகச் சந்தையையும் அதிகம் நம்பியிருந்த தீபாவளி பண்டிகை காலத்தில் பெரும்பாலான துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில், ஆட்டோமொபைல் துறை மட்டும் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், இந்த வருடம் அக்டோபர் மாதம் ஆட்டோமொபைல் துறை கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
ரீடைல் வாகன விற்பனை
ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பு இன்று வெளியிட்டு உள்ள அக்டோபர் 2021 மாத வர்த்தகத் தகவலில், ரீடைல் வாகன விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆட்டோமொபைல் உற்பத்தி
ஒரு பக்கம் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் சந்தைக்கு அதிகப்படியான வாகனங்களை உற்பத்தி செய்து அனுப்பினாலும், விற்பனையாகும் வாகனங்கள் தான் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகத்தைக் கணக்கிட முடியும்.
புதிய வாகனங்களின் ரிஜிஸ்ட்ரேஷன்
இந்த வகையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களைக் கணக்கெடுக்க எளிதான வழி நாடு முழுவதும் புதிய வாகனங்களின் ரிஜிஸ்ட்ரேஷன். அக்டோபர் 2021ல் இந்தியாவில் மொத்தம் 13,64,526 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பண்டிகை கால வர்த்தகம்
கடந்த ஆண்டு இதே அக்டோபர் 2020ல் 14,41,299 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் மாத விற்பனை 5.33 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் 42 நாள் பண்டிகை காலத்தில் மொத்த வாகனப் பதிவைக் கணக்கிடும் போது சுமார் 20,90,893 வாகனங்கள் உடன் 18 சதவீதம் சரிந்துள்ளது.
அதீத சரிவு
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாடி கூறுகையில், கடந்த 10 வருடத்தில் மிகவும் மோசமான பண்டிகை கால வர்த்தகத்தை இந்த ஆண்டு எதிர்கொண்டு உள்ளோம் எனக் கூறியுள்ளார்.
சிப் தட்டுப்பாடு, விலை உயர்வு
ஒருபக்கம் சிப் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை உயர்வு வாகன உற்பத்தி நிறுவனங்களை அதிகம் பாதிக்கும் நிலையில், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் கார் மற்றும் பைக் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் மத்தியில் வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது