உயர்கல்வி, பணிநீக்கம், உடல்நல பிரச்சினைகள் இப்படி ஏதேனும் ஒரு காரணத்திற்காக சிலர் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை கரியர் பிரேக் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு முன்னர் வரை பணிபுரிந்திருப்பார்கள். இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக வேலையிலிருந்து விலகும் போது.. ஒருவர் சேர்த்து வைத்த பிஎஃப் பணம் என்னவாகும்? அக்கவுண்ட் இருக்குமா? இருக்காதா? என்ற விபரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
வேலை இழப்புக்கு பிறகு PF பணம் என்னவாகும்?: நீங்கள் வேலையை விட்டு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை கரியர் பிரேக் எடுத்தாலும் உங்கள் EPF கணக்கு மூடப்படாது. இரண்டு ஆண்டு அல்ல அதற்கு மேலும் நீங்கள் பிஎஃப் கணக்கை பயன்படுத்தவில்லை என்றாலும் உங்கள் கணக்கு உங்களுக்கு சொந்தமானது தான். ஆனால் அதில் எந்த பங்களிப்பும் செய்யப்படாது. இருந்தாலும் ஏற்கனவே நீங்கள் பணியில் இருக்கும் போது எவ்வளவு பணம் செலுத்தி இருக்கிறீர்களோ? அதற்கு தொடர்ந்து வட்டி சேர்ந்து கொண்டே இருக்கும்.

ஈபிஎஃப்ஓ விதிகளின்படி ஒருவர் வேலை இழந்த பிறகு தொடர்ந்து அவருக்கு 58 வயது பூர்த்தியாகும் வரை கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறதோ? அந்த தொகைக்கு ஏற்ப வட்டி வழங்கப்படும். உதாரணமாக ஒருவர் 55 வயதில் ரிட்டையர் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவருடைய அக்கவுண்ட் அப்படியே இருக்கும். ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் தொகைக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை வட்டி வழங்கப்படும்.
58 வயதைக் கடந்த பின்னர் ஒருவருடைய கணக்கு இன்னாப்பரேட்டிவ் அக்கவுண்டாக மாறிவிடும். அதாவது செயல்படாத கணக்காக மாற்றப்படும். அதிலிருந்து வட்டி எதுவும் வழங்கப்படாது.
கரியர் பிரேக் எடுத்தவர்கள் பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?: ஒருவர் கரியர் பிரேக் எடுத்துக்கொண்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்தால் மொத்த பிஎஃப் சேமிப்பில் 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25 சதவீதத்தை எடுக்க முடியாது. ஒருவேளை 1 வருடம் தொடர்ந்து வேலை இல்லாமல் இருந்தால் 100% எடுத்துக் கொள்ளலாம்.
பழைய PF விதிகளில் ஊழியரின் பங்களிப்பை மட்டுமே எடுக்க முடியும். ஆனால் கரியர் பிரேக் எடுத்தாலோ அல்லது வேலை இழந்தாலோ முழு பிஎஃப் பணத்தையும் எடுக்கலாம். ஆனால் 2026-ஆம் ஆண்டில் ஈபிஎஃப் விதிகளின்படி ஒரு ஊழியர் தன்னுடைய பங்களிப்பு, தன் நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வட்டியாகிய அனைத்தையும் சேர்த்து 75 சதவீத தொகையை எடுக்கலாம். இதனால் வேலை இழப்புக்குப் பிறகும் கூடுதலான தொகை கைக்கு கிடைக்கும்.
வரி செலுத்த வேண்டுமா?: ஒரு நபர் 5 ஆண்டு வரை தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார். பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக வேலையை விட்டுவிட்டு பிஎஃப் பணத்தை எடுத்தால்.. அவருடைய பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வட்டியாகிய அனைத்திற்கும் முழு வரி விலக்கு வழங்கப்படும். அதுவே ஒருவர் 5 ஆண்டுக்கும் குறைவாக பணிபுரிந்து விட்டு பணத்தை எடுக்கிறார் என்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
வட்டி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?: EPFO அமைப்பின் கீழ் எண்ணற்ற உறுப்பினர்கள் இருப்பதால் ஒரு சிலருக்கு வட்டி வரவு வைக்கப்பட்டதா என்ற விவரங்கள் பாஸ்புக்கில் காண்பிக்க நேரம் எடுக்கலாம். ஆனால் உங்களுடைய கேஒய்சி விபரங்கள் அனைத்தும் சரியாக இருந்து.. உங்களுடைய வங்கி கணக்கு விபரமும் சரியாக இருந்தால் பயப்படவே தேவையில்லை. கண்டிப்பாக சரியான நேரத்தில் வட்டி வந்துவிடும்.
பிஎஃப் பணம் கைக்கு கிடைக்க எவ்வளவு நாட்கள் எடுக்கும்?: இதுவரையில் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு அதன் பிறகு 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருந்து பணத்தை பெற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இதை எளிதாக்கும் விதமாக EPFO அமைப்பு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து 24 மணி நேரம் அல்லது 2 நாட்களுக்குள் பிராசஸ் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
உங்களுடைய விண்ணப்பம் 20 நாட்களுக்குள் தீர்க்கப்படவில்லை என்றால் நீங்கள் epfigms.gov.in என்ற இணையதளத்தில் உங்களுடைய புகாரைப் பதிவு செய்யலாம். ஒரு வேளை நீங்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஆண்டுக்கு 12 சதவீத வட்டி என்ற அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் அந்தத் தொகை சம்பந்தப்பட்ட PF அதிகாரியின் சம்பளத்தில் இருந்தே கழித்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரியர் பிரேக் எடுப்பவர்கள் முழு PF தொகையையும் எடுப்பதற்கு பதிலாக அந்த பணத்தை அக்கவுண்டில் வைத்திருந்தால் தொடர்ந்து வட்டி வந்து கொண்டே இருக்கும்.


Click it and Unblock the Notifications
