தோண்டத் தோண்ட பல முறைகேடுகளும், திடுக்கிடும் உண்மைகளும் NSE வழக்கில் வந்துகொண்டு இருக்கிறது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் சிபிஐ தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் குரூப் ஆப்ரேட்டிங் தலைவரான ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்ட பின்பு இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் மீது சிபிஐ தனது கவனத்தைத் திருப்பியது.
இதன் வாயிலாகச் சிபிஐ இன்று OPG செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரை கைது செய்துள்ளது.
NSE கோ லொகோஷன் வழக்கு
NSE கோ லொகோஷன் வழக்கு தொடர்பாக OPG செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான சஞ்சய் குப்தா-வை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தக் கைதுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் சஞ்சய் குப்தா-வின் நிறுவனம், அலுவலகம், வீடு என 10க்கும் அதிகமான இடத்தில் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் குப்தா
சிபிஐ அதிகாரிகளால் சமீபத்தில் செய்யப்பட்ட விசாரணையில் செபி அதிகாரிகளைச் சந்திக்கச் சஞ்சய் குப்தா-வுக்கு உதவிய கும்பல் சிக்கியுள்ளது. 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் என்எஸ்ஈ அல்காரிதம் மோசடி குறித்துச் சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் சஞ்சய் குப்தா சிக்கியுள்ளார்.
மும்பை சிண்டிகேட்
மும்பை-யை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு சிண்டிகேட் என்எஸ்ஈ வழக்கை விசாரணை செய்து வரும் செபி அதிகாரிகளைச் சந்திக்கச் சஞ்சய் குப்தா-வுக்கு உதவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் சிபிஐ 10க்கும் அதிகமான இடத்தில் சோதனை செய்து அவரைக் கைது செய்துள்ளது. இந்த விசாரணையில் சஞ்சய் குப்தா செபி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு உள்ளது.
சிபிஐ
என்எஸ்ஈ 2018 வழக்கின் FIR அறிக்கையில் OPG செக்யூரிட்டீஸ், செபி, என்எஸ்ஈ அமைப்பின் அதிகாரிகள் பலரின் பெயர் சிபிஐ குறிப்பிடப்பட்டு உள்ளது. சஞ்சய் குப்தா-வுக்கு இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை அழிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது, அதற்காகவே செபி அதிகாரிகளைச் சந்திக்க முயற்சி செய்துள்ளார் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கோ-லொகேஷன் வழக்கு விளக்கம்
NSE கோ-லொகேஷன் வழக்கு என்பது என்எஸ்ஈ அமைப்பில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமை பொறுப்பில் இருந்த போது விதிமுறைகளை மீறி, என்எஸ்ஈ சர்வர்களின் ஆக்சஸ்-ஐ முறைகேடாக என்எஸ்ஈ-யின் கோ லொகேஷன் சேவையைப் பயன்படுத்தி வெளியாட்களுக்குப் பகிரப்பட்டது தொடர்பானது. இந்த ஆக்சஸ் சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைத்து முதலீட்டாளர்களுக்கு முன்பாகவே வர்த்தகத் தரவுகளைப் பார்க்க முடியும்.