ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ள என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் முக்கிய நபராக விளங்கும் என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியனிடம் சிபிஐ 3 நாட்களாக சென்னையில் கடுமையாக விசாரணை நடத்தி வருகிறது.
ஒருபக்கம் இவர் தான் இமயமலை சாமியார் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சிபிஐ அமைப்பின் விசாரணை மூலம் பல முக்கியமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்க்படுகிறது.
சிபிஐ அமைப்பு
சிபிஐ அமைப்புச் சென்னையில் கடந்த 3 நாட்களாக என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியனிடம் செய்து வரும் விசாரணையில் செபி அமைப்பின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த்-க்கு மத்தியிலான மின்னஞ்சல் பரிமாற்றம் குறித்தும், இமயமலை சாமியார் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் சுப்ரமணியன் கம்ப்யூட்டர்
என்எஸ்ஈ மற்றும் EY செய்த ஆய்வில் ஆனந்த் சுப்ரமணியனின் என்எஸ்ஈ கம்ப்யூட்டரில் "anand.subramanian9" மற்றும் "sironmani.10" என்ற இரு ஸ்கைப் ஐடி இருந்துள்ளதாகவும், இந்த ஸ்கைப் முகவரி rigyajursama@outlook.com மற்றும் ஆனந்த் சுப்ரமணியனின் மொபைல் எண் உடன் இணைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சாமியார் யார்..?
இதனால் ஆனந்த் சுப்ரமணியன் தான் சித்ரா ராமகிருஷ்ணா குறிப்பிடும் அந்தச் சாமியாராக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால் அதைச் சித்ரா கடுமையாக மறுத்துள்ளது முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் சிபிஐ-யின் இந்த விசாரணை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
2018 வழக்கு
2018ஆம் ஆண்டில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குத் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் கடந்த வாரம் சிபிஐ இந்த வழக்கின் விசாரணையைக் கையில் எடுத்தது. கடந்த வாரம் சித்ரா-வுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
சிபிஐ, அமலாக்க துறை
மேலும் சிபிஐ கடந்த வாரம் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரவி நரேன் ஆகியோருக்கு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்ல தடையும் விதிக்கப்பட்டது. விரைவில் அமலாக்க துறையும் இந்த வழக்கின் விசாரணையில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.