டெல்லி: ப்யூச்சர் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவினை வாங்குவதற்கான, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் (CCI) வழங்கியுள்ளது.
அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்கு எதிராக ஆன்லைன் ஈ காமர்ஸ் வணிகத்தில் சமீபத்தில் இறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க பணிகளுக்கு அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தான் ப்யூச்சர் குழுமத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.
தற்காலிக தடை
ஆனால் ப்யூச்சர் குழுமத்தின் கூட்டாளரான அமேசான் தனது கூட்டாளருக்கு எதிராக நீதிமன்றத்தினை நாடியது. இந்த வழக்கில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம், தனது இடைக்கால உத்தரவில் பியூச்சர் குழு தனது சில்லறை வணிக்கத்தினை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 3.38 பில்லியன் டாலர் பங்குகளை விற்க தற்காலிகமாக தடை விதித்தது.
சூமுகமான முடிவு எட்ட வேண்டும்
அமேசான் Vs பியூச்சர் குழுமம் Vs ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கில், கடந்த மாதம் அமேசானுக்கு சாதகமாக இந்த தீர்ப்பினை சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இதனால் தற்காலிகமாக இந்த ஒப்பந்தமும் நிறுத்தி வைக்குமாறு ப்யூச்சர் குழுமத்திடம் கூறியது. இந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு இறுதி தீர்ப்பை எட்டும் வரையில், ஒப்பந்தத்தில் ஒரு சூமுகமான தீர்வினை எட்ட முடியாது என்றும் கூறியது..
ப்யூச்சர் குழுமம் – ரிலையன்ஸ்
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்கியிருந்தது கவனிக்கதக்கது. இதற்கிடையில் கிஷோர் பியானிக்கு சொந்தமான பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது. இது கடன் அதிகரித்ததை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதனையடுத்து ப்யூச்சர் குழுமத்தினை கையகப்படுத்த 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டது.
மாற்றம் செய்யப்படலாம்
ஆக இப்படியொரு சிக்கலான பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் இந்தியா போட்டி ஆணையம், ரிலையன்ஸூக்கு சாதகமாக ஒப்புதல் அளித்துள்ளது. ப்யூச்சர் குழுமம் மற்றும் ரிலையன்ஸ் ஒப்பந்தம் சுமூகமாக போடப்பட்டால், பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை பங்குகள் அனைத்தும், ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்படலாம்.
இனி இதெல்லாம் ரிலையன்ஸ் வசம் வரும்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிக்பஜார், எம்பிபி, ஃபுட்ஹால், ஈஸிடே, நீலகிரி சென்ட்ரல் அன்ட் பிராண்ட் பேக்டரியை கையகப்படுத்தலாம். அதோடு சில கடன் மற்றும் பொறுப்புகளையும் ரிலையன்ஸ் எடுத்துக் கொள்ளும் என்றும் ரிலையன்ஸ் தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆக இதன் மூலம் ரிலையன்ஸ் தனது சில்லறை வர்த்தகத்தினை பலப்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.