இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமாக இருக்கும் கிளவுட்டெயில் மற்றும் அப்பாரியோ நிறுவனத்தின் சிசிஐ அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் இயங்கி வரும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தங்களது சொந்த ஈகாமர்ஸ் தளத்தில் சொந்த விற்பனை நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யக் கூடாது உட்படப் பல விதிமுறைகளை விதித்துள்ளது.
சிசிஐ அமைப்பு
இந்நிலையில் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது இல்லை, இது தொடர்பாகச் சில வழக்குகளும் நடந்து வரும் நிலையில் சிசிஐ அமைப்பின் இந்த அதிரடி சோதனை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கிளவுட்டெயில், அப்பாரியோ
சிசிஐ அமைப்பு அதிகாரிகள் அமேசான் மற்றும் பாட்னி குரூப் கூட்டணியில் இயங்கி வரும் இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் மிகப்பெரிய விற்பனை நிறுவனமான கிளவுட்டெயில், அப்பாரியோ ரீடைல் ஆகிய நிறுவனத்தில் சோதனை செய்துள்ளது.
பிளிப்கார்ட், மீஷோ
இந்தச் சோதனையில் அமேசான் மட்டும் அல்லாமல் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட், ரீசெல்லர் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் மீஷோ நிறுவனத்தின் முக்கிய மற்றும் முன்னணி விற்பனை நிறுவனங்களிலும் சிசிஐ அமைப்புச் சோதனை செய்துள்ளது.
இந்திய போட்டி ஆணையம் (CCI)
இந்த ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தனது சொந்த விற்பனை நிறுவனங்களுக்கு மட்டும் அதிகப்படியான ஆர்டர்களை வழங்கும் வகையில் நிர்வாகம் செய்து சந்தையில் போட்டித்தன்மை அதிகளவில் குறைத்து ஆதிக்கம் செய்கிறது எனப் பல புகார்கள் வந்த நிலையில் இந்திய போட்டி ஆணையம் (CCI) இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.
ஆன்லைன் விற்பனையாளர்கள்
ஈகாமர்ஸ் நிறுவனம் விற்பனையாளர் ஆன்லைனில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு அளிக்கும் பணி மட்டுமே செய்ய வேண்டும். அனைத்து விற்பனையாளர்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.
அமேசான், பிளிப்கார்ட், மீஷோ
ஆனால் அமேசான், பிளிப்கார்ட், மீஷோ போன்ற நிறுவனங்கள் தங்களது சொந்த விற்பனை நிறுவனங்களுக்குக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான வத்தகத்தைத் தத்தம் நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் மாற்றங்களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
முதல் முறை சோதனை
இத்தகைய புகார்களை ஆப்லைன் வர்த்தகர்கள், சிறு ஆன்லைன் வர்த்தகர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் நிலையில் தற்போது சிசிஐ அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. சிசிஐ அமைப்பு ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் பாரபட்சம் குறித்து முதல் முறையாக இத்தகைய சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.