உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியா உள்பட பல நாடுகளில் சேவை செய்து வருகிறது என்பது தெரிந்ததே.
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஓ.எஸ் இன்று உலகில் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் தவறாக தனது ஆதிக்கத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்திய போட்டி ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு ரூபாய் 1337.76 கோடி அபராதம் விதித்துள்ளது.
கூகுள் ஆண்ட்ராய்டு
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கூகுளின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஒரே ஒ.எஸ் ஆன ஐ.ஓ.எஸ் மட்டுமே உள்ளது.
ஆதிக்கம்
இந்த ஒரே ஆதிக்கத்தை கூகுள் பெற்றுள்ளதால் அதனை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து இந்திய போட்டி ஆணையம் விசாரணை செய்தது. விசாரணையில் கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் ரூ.1337.76 அபராதம் விதிப்பதாக இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத்திற்கன விளக்கங்கள் மற்றும் ஆவணங்கள் 30 நாட்களில் கூகுள் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
5 சந்தைகளில் ஆதிக்கம்
இந்த அபராதம் குறித்து இந்திய போட்டி ஆணையம் மேலும் கூறியபோது, 'கூகுள் நிறுவனம் 5 சந்தைகளில் தனது ஆதிக்கத்தை தவறாக செலுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உரிமம் பெற்ற ஓஎஸ் சந்தை, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் செயலி சந்தை, பொது இணைய தேடல் சேவைகளின் சந்தை, ஓஎஸ் அல்லாத மொபைல் பிரவுசர்களின் சந்தை மற்றும் ஆன்லைன் வீடியோ ஹோஸ்டிங் சந்தை ஆகிய 5 சந்தைகளில் கூகுள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
கூகுள் செயலிகள்
மேலும் மொபைல்போன் உற்பத்தியாளர்கள் கூகுளின் செயலிகளை தங்கள் சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய நிர்ப்பந்திக்க கூடாது என்றும் கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், அப்படியே இன்ஸ்டால் செய்தாலும் அந்த செயலிகளை நீக்கும் வசதியும் இருக்க வேண்டும் என்றும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.