இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தையில் பலத்த போட்டிகள் நிலவி வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் ஆப் மூலமாக உணவு டெலிவரியினை செய்து வரும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனாவிற்கும் மத்தியிலும் இந்த நிறுவனங்கள் பலத்த சவாலினை மேற்கொண்டு வந்தன. எப்படியிருப்பினும் தற்போது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் சோமேட்டோ நிறுவனம் நாளை அதன் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதன் மூலம் 9.375 கோடி ரூபாய் நிதியினையும் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் புதிய பங்கு வெளியீடாக 9,000 கோடி ரூபாயும், 375 கோடி ரூபாய் அதன் முதலீட்டாளரிடம் இருக்கும் பங்கினையும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சோமேட்டோவின் பிரம்மாண்ட விரிவாக்க திட்டம்
அதோடு இவ்வாறு திரட்டப்படும் நிதியானது அதன் வணிக விரிவாக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தது. குறிப்பாக அதன் வாடிக்கையாளர்கள் விரிவாக்கம், மார்கெட்டிங், உள்கட்டமைப்பு வசதிகள், விளம்பரம், டெக்னாலஜிகள், மற்ற நிறுவனங்களை கையகப்படுத்தல், கடன் அடைத்தல் என பல வகையிலும் பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
ஸ்விக்கியில் $450 மில்லியன் முதலீடு
சோமேட்டோவின் இந்த விரிவாக்க திட்டத்திற்கு மத்தியில் நாளை தான் பொதுப் பங்கு விற்பனையே தொடங்கவுள்ளது. இதற்கிடையில் மற்றொரு முன்னணி உணவு டெலிவரி மற்றும் மளிகை டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில், அதன் முந்தைய முதலீட்டாளரான சாப்ட்குழுமம் 450 மில்லியன் டாலர் முதலீடு செய்ய சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
வணிக விரிவாக்கத்திற்கு திட்டம்
ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய இரு நிறுவனங்களுமே உணவு டெலிவரியில் மட்டும் அல்ல, மளிகை பொருட்கள் டெலிவரி வணிகத்திலும் கடும் போட்டி போட்டுக் கொண்டு வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தனது சில்லறை வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு நிதியினையும் திரட்டி வருகின்றன.
பலத்த போட்டி
ஏற்கனவே சந்தையில் நிலவி வரும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில், ஏற்கனவே பல குரோசரி நிறுவனங்கள் இந்த சேவையினை செய்து வருகின்றன. எனினும் அவை டெலிவரி செய்வதற்காக பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. அதிலும் தற்போதுள்ள காலகட்டங்களில் குறிப்பாக நகரப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விரும்புவதில்லை.
எதற்காக இந்த நிதி திரட்டல்
ஆக அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு வீட்டிலேயே இருக்க நினைக்கின்றனர். இதனால் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்த சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும் எளிதாக தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய முடியும் என தொடர்ந்து நிதியினை திரட்டி வருகின்றன.
ஸ்விக்கியின் அதிரடி திட்டம்
ஏற்கனவே ஸ்விக்கி நிறுவனம் 45 நிமிடங்களுக்குள் இந்த டெலிவரியை செய்து முடிக்கும் அளவுக்கு திட்டங்களை வகுத்துள்ள நிலையில், ஸ்விக்கியின் இந்த நிதி திரட்டலானது, சோமேட்டோ, ஜியோமார்ட், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல டெலிவரி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் சவால் விடும் ஒரு விஷயம் தான்.