இந்தியாவின் ஜிடிபி விகிதமானது 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமாக சரிந்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இந்தளவுக்கு மோசமான வீழ்ச்சியில் இருந்து எப்படி மீளப்போகிறோம். என்ன செய்ய போகிறது அரசு என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 4 மில்லியனுக்கும் அதிகமாகவே உள்ளது.

இதனால் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அரசு படிப்படியாக லாக்டவுனில் தளர்வுகளை அளித்து வரும் நிலையில், இது அடுத்து வரும் காலாண்டுகளில் ஆவது ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள மூத்த பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், ஜிடிபி வீழ்ச்சிக்கு கொரோனா லாக்டவுன் தான். எனினும் சில முக்கிய துறைகளில் வி வடிவ வளர்ச்சி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக இந்த வளர்ச்சியானது விவசாய துறையில் வலுவாக காணப்படும். மேலும் அரசால் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டால், நிச்சயம் மிக வலுவான வளர்ச்சியினை காண முடியும் என கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, அது நடைமுறையில் ஒத்து வராது. ஏனெனில் இங்கு லாக்டவுன் மிக கடுமையானது. அது மிக அவசியமானதும் கூட என டிவிபி அட்வைசர்ஸ் எல் எல் பியின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியான திவாகர் விஜயசாரதி கூறியுள்ளார்.
மேலும் நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கருத்தினை கூறிய விஜயசாரதி, லாக்டவுனில் எவ்வளவு தளர்வுகள் அளிக்கப்படும், அது எவ்வளவு சிறப்பாக செயல்படப்போகிறது, கொரோனா வைரஸூக்கான தடுப்பூசியின் வெற்றி என இவற்றை பொறுத்து தான் வளர்ச்சி விகிதம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
உண்மையில் தற்போது நாடு முழுவதும் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது எனலாம். நிச்சயம் இது அடுத்து வரும் காலாண்டுகளில் வளர்ச்சியினை பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications