இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது E20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதாவது கடையில் சென்று பெட்ரோல் போட்டாலே அது எத்தனால் கலந்த E20 பெட்ரோலாக தான் இருக்கிறது.
E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் இந்தியா எரிபொருளுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்காது என அரசு கூறுகிறது. ஆனால் E20 பெட்ரோலை அரசு திணிக்கிறது இதனால் மைலேஜ் கிடைக்காமல் போகிறது என பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. குறிப்பாக பழைய வாகனங்களில் மைலேஜே இல்லாமல் போய்விட்டது, என்ஜின் பிரச்சினை ஏற்படுகிறது என பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் மீண்டும் E10 ரக பெட்ரோலை விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். E20 பெட்ரோல் என்ஜின்களை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கவும், அதே சமயம் பழைய வாகனங்களை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கட்டுரை எழுதியுள்ள அவர், E20 பெட்ரோல் என்ஜின்களை சேதப்படுத்துவதாக கூறப்படும் புகார்களை தவறான புரிதல் என கூறியுள்ளார். எத்தனால் என்பது பெட்ரோலை விட குறைவான ஆற்றல் கொண்டதாக இருந்தாலும், E20 கலவையில் ஆற்றல் இழப்பு என்பது வெறும் 6 முதல் 7 சதவீதம் மட்டுமே. இது என்ஜினை பெரிய அளவில் பாதிக்காது என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் BS4 ரகத்திற்கு முந்தைய காலத்தை சேர்ந்த சுமார் 7.5 முதல் 8 கோடி இருசக்கர வாகனங்கள் கார்புரேட்டர் (carburettor) தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. இந்த வாகனங்களால் E20 கலவையில் உள்ள அதிகப்படியான ஆக்சிஜனை சரிசெய்ய முடியாது. இதனால் என்ஜின் அதிக வெப்பமடைகிறது. மேலும், பழைய ரப்பர் சீல்கள் (Rubber seals) எத்தனால் தொடர்பால் எளிதில் சிதைவடைகின்றன. இவற்றை மாற்றுவது எளிதானது என்றாலும், கோடிக்கணக்கான வாகனங்களுக்கு இந்த மாற்றத்தை செய்ய பல ஆண்டுகள் ஆகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பழைய வாகனங்களை பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் அச்சத்தை போக்குவதற்கும் E10 பெட்ரோலை மீண்டும் பெட்ரோல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் விரும்பினால் E20 அல்லது E10 என தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கலாம். இது பழைய வாகனங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதே வேளையில், வாகனங்களை படிப்படியாக நவீனப்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் வழங்கும் என கூறியுள்ளார்.
எத்தனால் கலப்பை E20-லிருந்து அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அவர் இந்த திட்டம் உணவு பொருட்களுக்கான தானியங்களை பாதிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது. உணவா அல்லது எரிபொருளா என்ற விவாதத்தை முறையாக ஆராயாமல், அவசரமாக இந்த முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் கரும்பு விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும், இறக்குமதி சுமையை குறைக்கவும் உதவியுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும், கொள்கை முடிவுகளை எடுக்கும்போது சுற்றுச்சூழல் நன்மைகளையும், நடைமுறை சிக்கல்களையும் சமமாக எடைபோட்டு செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

