இந்தியாவில் அனைத்து நுகர்வோர் மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் உலோகங்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமான துறையைப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் பல லட்சம் கட்டுமான திட்டங்கள் மந்தமாவது மட்டும் அல்லாமல், இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எண்ணிக்கை குறையலாம்.
சிமென்ட் விலை
இந்தியாவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் வேகமாக நடந்து வரும் நிலையில் சிமெண்டுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதேவேளையில் அதிகரித்து வரும் மூலப்பொருள் விலை காரணமாகச் சிமென்ட் விலை மேலும் உயர்த்தப்படும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
2-3 சதவீதம் அதிகரிப்பு
மார்ச் 2022 இல், ஆண்டு இறுதி இலக்குகளை அடைய, அதிகப்படியான விற்பனை இருந்த போதிலும், நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் சிமென்ட் விலைகள் 2-3 சதவீதம் அதிகரித்து வந்தது. இது ஏப்ரல் மாதத்தில் கட்டுமான பணிகளைக் கணிசமான அளவு தொய்வடையச் செய்துள்ளது மறுக்க முடியாது.
மோதிலால் ஓஸ்வால்
2022ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் கணிக்கப்பட்ட அளவை காட்டிலும் சிமெண்ட் விலை 3 சதவீதம் அதிகமாகவே இருந்ததது என மோதிலால் ஓஸ்வால் தெரிவித்துள்ளது. மேலும் விற்பனை செய்யப்படாமல் இருப்பில் இருக்கும் சிமெண்ட் மூட்டையின் விலை தென் மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் 15-20 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் 5 முதல் 10 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
சிமெண்ட் உற்பத்தி
இதேவேளையில் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அடுத்தச் சில வாரத்தில் சிமெண்ட் விலையை மீண்டும் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கட்டுமான துறை
ஏப்ரல் 2022 உடன் முடிந்த நிதியாண்டில் சிமெண்ட் விலை 40-50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், புதிய விலை உயர்வு கட்டுமான துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.