உலகில் உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி அதி அவசியமான ஒன்றாக இருக்கிறதோ, அதே போல ஒரு நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்க, கடனும் அவசியமாகிறது.
ஆனால் அதே கடன், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால், ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் மூழ்கடித்துவிடும்.
மோதிலால் ஓஸ்வால் என்கிற தரகு நிறுவனம், இந்தியாவில் இருக்கும் மத்திய & மாநில அரசுகளின் கடன் குறித்து ஒரு சில முக்கிய விஷயங்களை, தன் நிதி அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறது.
91.3% கடன் ஜிடிபி விகிதம்
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், இந்தியாவில் இருக்கும் மத்திய & மாநில அரசுகளின் கடன் அளவு, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 70 சதவிகிதமாக இருந்தது. இதை ஆங்கிலத்தில் Debt to GDP Ratio என்பார்கள். இந்த Debt to GDP Ratio, 2019 - 20 நிதி ஆண்டில் 75 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். 2021 - 22 நிதி ஆண்டில் இந்தியாவின் Debt to GDP Ratio, 91.3 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என்று சொல்லி இருக்கிறது மோதிலால் ஓஸ்வாலின் நிதி அறிக்கை.
60 சதவிகிதம்
இந்திய அரசு, தன் Debt to GDP Ratio-வை, 2024 - 25 நிதி ஆண்டுக்குள் 60 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் அரசாங்கங்கள் வாங்கி இருக்கும் கடனை கணக்கில் எடுத்துக் கொண்டால், மேலே சொன்ன இலக்கை அடைய இன்னும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்கிறது மோதிலால் ஓஸ்வாலின் நிதி அறிக்கை.
உலக வங்கி அறிக்கை
ஒரு நாட்டின் Debt to GDP Ratio தொடர்ந்து 77 சதவிகிதத்துக்கு மேல் நீண்ட நாட்களுக்கு இருந்தால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த மடையும் என்கிறது ஒரு உலக வங்கியின் அறிக்கை. ஆக இந்த அதிகப்படியாக கடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கலாம்.
5 - 6 % ஜிடிபி வளர்ச்சி
இதன் விளைவாக, அடுத்த தசாப்தத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 - 6 சதவிகிதமாக மட்டுமே இருக்கலாம் எனவும் கணித்து இருக்கிறது மோதிலால் ஓஸ்வால். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு, தனியார் நுகர்வு & அரசு செலவீனங்கள் தான், முக்கிய காரணிகளாக இருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.