முன்னணி நிதி நிறுவனமாக இருக்கும் ஜெஃப்ரிஸ், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகளவில் இருக்கும் மத்திய வங்கிகள் அமெரிக்க அரசின் பத்திரங்களை விட தங்கத்தை அதிகமாக வாங்கி குவிப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் உலக மத்திய வங்கிகள் சட்டம் இயற்றி தங்களிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது? அதற்கு எவ்வளவு பணம் அச்சிடப்படுகிறது? என்பதை வெளிப்படையாக கூறின. ஆனால் இப்போது அது போன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாவது இல்லை. டாலர் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் பயம் காரணமாக அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாரி குவித்து வருகின்றன.
ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் குளோபல் ஹெட், கிறிஸ்டோபர் வுட் உலக வங்கிகள் ஏன் தங்கத்தை தொடர்ந்து வாங்குகின்றன? என்பதற்கான விளக்கத்தைக் கூறியுள்ளார். மத்திய வங்கிகள் வட்டியை அதிகரிக்கும் போது... முதலீட்டாளர்கள் வட்டி தரும் அரசு திட்டங்களின் பக்கம் போவார்கள். ஏனெனில் தங்கத்தில் முதலீடு செய்வதால் எந்த வட்டியும் கிடைக்காது. அப்படி இருக்கையில் அதிக வட்டி தரும் கடன் பத்திரங்கள் போன்றவற்றைத் தான் அதிகம் நம்புவார்கள். அந்த சமயத்தின் போது தங்கத்தின் விலை தற்காலிகமாக குறையும்.
ஆனால் தற்போது வட்டி விகிதங்கள் எதுவும் குறையாமல் இருந்தாலும்.. அமெரிக்காவின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கிறிஸ்டோபர் வுட் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா இதுவரையில் வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.03 ட்ரில்லியன் டாலர் வட்டி செலுத்தி வருகிறது.

இது அந்நாட்டிற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் 19 சதவீதம் ஆகும். அமெரிக்க அரசுக்கு வரும் வருமானத்தில் 93 சதவீதம் இதர விஷயங்கள் மற்றும் பொதுநல திட்டங்களுக்கு செலவாகிறது. இப்படிப்பட்ட சூழல் நிலவுவதால் அந்நாட்டின் நாணயத்தை உலக நாடுகள் நம்புவதற்கு யோசிக்கத் தொடங்கியுள்ளன.
தங்கள் கடனைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் கிறிஸ்டோபர் கணித்துள்ளார். அந்த வகையில் அமெரிக்கா செலவு குறைப்பு நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளது. ஒரு நாட்டின் கடனை குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் செலவுகளை குறைத்து, வரியை அதிகரிக்கும். ஆனால் மக்கள் செலுத்தும் வரி அதிகரித்தால்.. மறுமுறை அந்த தேர்தலில் மக்கள் வரி உயர்வை அறிவித்த அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
எனவே அமெரிக்க அரசு இதை செய்வதற்கு தயங்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த நடைமுறைக்கு பதிலாக அமெரிக்கா தற்காலிகமாக வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. இது போன்ற சூழலில் பணவீக்கம் அதிகரித்து அவர்கள் வாங்கிய கடனின் உண்மையான மதிப்பு குறைய தொடங்கும்.
உதாரணமாக நீங்கள் யாரோ ஒருவரிடம் ரூ.5000 கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதேபோல அமெரிக்க அரசும் கடன் வாங்கி இருக்கிறது. நீங்கள் கடன் வாங்கி இருக்கும் நாட்டில் பணவீக்கம் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் வாங்கிய 5,000 ரூபாயின் மதிப்பு ஒருவேளை சாப்பாடு வாங்கும் செலவிற்கு சமமாக மாறிவிடுகிறது. இப்போது நீங்கள் வாங்கிய ரூ.5000 கடனை உடனே அடைத்து விடுவீர்கள். இது கடன் வாங்கிய உங்களுக்கு லாபம். ஆனால் கடன் கொடுத்தவருக்கு நஷ்டம்.
ஏனெனில் பணத்தின் உண்மையான மதிப்பு பணவீக்கத்தின் காரணமாக குறைந்து விடுகிறது. இதைத்தான் அமெரிக்கா அரசு தங்கள் நாட்டின் கடனை குறைப்பதற்கு செய்யப் போகிறது என்று கிறிஸ்டோபர் கூறுகிறார். இது போன்ற நேரத்தில் மக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் மற்றும் இதர திட்டங்களுக்கான வருமானம் கணிசமாக குறையும். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் உலக வங்கிகள் நிலையான மதிப்பை கொண்டிருக்கும் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றனர்.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான வேர்ல்ட் கோல்டு கவுன்சிலின் தரவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் அமெரிக்கா மத்திய வங்கி 8134 டன்களுடன் உலகின் மிகப்பெரிய தங்க கையிருப்பு நாடாக தொடர்கிறது. அடுத்ததாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கிறது. ஜெர்மனி 3350 டன்கள், அதை தொடந்து இத்தாலி 2452 டன்கள் பிரான்ஸ் 2437 டன்கள் தங்கத்தை கொண்டுள்ளன. ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை 2300 டன்களுக்கும் அதிகமான தங்க கையிருப்பை கொண்டுள்ளன. இந்தியா 880 டன்களுடன் உலக அளவில் 8-வது இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் தங்க கையிருப்பில் முதல் 10 இடங்களில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications