பணத்தின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது, கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் குறைந்த காலகட்டத்தில் பல மடங்கு உயர்த்த வேண்டும் என்றால் ஸ்மார்ட்டான முடிவின் மூலம் முதலீடு செய்தால் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்.
அந்த வகையில் மத்திய அரசு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் ஒரு முக்கியமான முதலீட்டில் திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
அனைத்தையும் தாண்டி நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி சலுகையும் உண்டு என்பது தான் கூடுதல் சிறப்பு..!
மத்திய அரசு முதலீட்டுத் திட்டங்கள்
மத்திய அரசு மக்களுக்குப் பல விதமான முதலீட்டுத் திட்டத்தைக் கொடுத்தாலும், மாத சம்பளக்காரர்களுக்கு ஏற்ற வகையில் வருமான வரி சலுகையோடு கொடுக்கக் கூடிய சில முக்கியமான திட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டம் தான்.
பப்ளிக் பிராவிடென்ட் பண்ட்
பிபிஎப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் முதல் அதிகப்படியாக 12, 500 ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் 1.5 லட்சம் ரூபாய் தொகைக்கு முழுமையான வருமான வரிச் சலுகை உள்ளது.
15 வருடம் மட்டுமே
பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டத்திற்கு 15 வருடம் மட்டுமே முதிர்வு காலம், ஆனால் நம்முடைய 1 கோடி ரூபாய் இலக்கை அடைய இந்த 15 வருடம் போதாது. ஆனால் பிஎப் திட்டத்தில் 5 ஆண்டுகள் வீதம் முதிர்வு காலத்தை நீட்டிக்க முடியும். அதாவது 15 வருட முதிர்வு காலத்திற்குப் பின் 20 வருடம், 25 வருடம் என நீட்டிக்க முடியும்.
100 சதவீதம் பாதுகாப்பு
மத்திய அரசின் 100 சதவீதம் பாதுகாப்பு கொண்ட இந்தப் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் முதல் தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தை முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
7.1 சதவீத வட்டி
பிபிஎப் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய அரசு சுமார் 7.1 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்த பின்பு மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் முதலீட்டுக்கான வட்டியை டெப்பாசிட் செய்யும்.
37, 50, 000 ரூபாய் முதலீடு
இதன் படி இத்திட்டத்தின் முதலீட்டு அளவில் அதிகப்படியான 12, 500 ரூபாய் தொகையை ஒவ்வொரு மாதமும் 25 வருடம் தொடர்ந்து முதலீடு செய்தால் மொத்தம் 37, 50, 000 ரூபாய் அளவிலான தொகையை நீங்கள் முதலீடு செய்திருப்பீர்கள், தற்போதைய வட்டி விகித அளவான 7.1 சதவீத வட்டியில் கணக்கிட்டால் வட்டி வருமானம் மட்டுமே 65, 58, 012 ரூபாய் கிடைக்கும்.
1.03 கோடி ரூபாய்
இதன் மூலம் 25 வருட முதலீட்டில் திட்டமிட்ட 1.03 கோடி ரூபாய் அளவிலான தொகையை எவ்விதமான பயமும் இல்லாமல் 100 சதவீத பாதுகாப்புடன் முதலீடு செய்து பெற முடியும். மேலும் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்ட முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமான வரிச் சலுகை தான் மிகவும் முக்கியமானது.