தற்போது இந்திய விமான துறை அமைச்சராக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் 'ஜெய் விலாஸ் மஹால்' என்ற மாளிகையின் மதிப்பு இன்று 4000 கோடி என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குவாலியர் மாகாணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் வம்சாவளிகள் தொடர்ந்து வாழ்ந்து வரும் ஜெய் விலாஸ் மாளிகை குறித்த ஆச்சரியமான தகவல்களை தற்போது பார்ப்போம்.
1874 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாட்டின் கட்டடக்கலையின் அடிப்படையைக் கொண்டு மைக்கேல் ஃபிலோஸ் என்பவர் இந்த மாளிகையை கட்டினார்.
ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 771 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஜெய் விலாஸ் மாளிகை மூன்றடுக்கு கட்டிடமாக பிரம்மாண்டமாக உருவெடுத்து உள்ளது. இந்த மாளிகை இத்தாலிய மற்றும் டஸ்கன் கட்டிடக்கலையின் நுணுக்கங்களையும் கலவையாக கட்டப்பட்டுள்ளது
ரூ.4,000 கோடி மதிப்பு
இந்த மாளிகையில் தான் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் முன்னோர்கள் முதல் தற்போதைய தலைமுறையினர் வரை வாழ்ந்து வருகின்றனர். இந்த மாளிகை 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜெய் விலாஸ் மஹால் மாளிகை
இந்த மாளிகையில் உள்ள டின்னர் ஹால் மட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அதில் உணவுகள் மற்றும் மது வகைகள், சிகரெட் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும் டேபிள் ரயில் தண்டவாளம் போல் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
400 அறைகள்
இந்த மாளிகையில் மொத்தம் 400 அறைகள் உள்ளன. இதில் 35 அறைகள் தற்போது மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் ஜான்சிராணி பயன்படுத்திய வாள்கள் மற்றும் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட பொருட்கள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
அவுரங்கசீப் மற்றும் ஷாஜகான்
மேலும் அவுரங்கசீப் மற்றும் ஷாஜகான் பயன்படுத்திய வாள்கள் உள்பட பல அரிய பொருள்களை இந்த மியூசியத்திற்கு சென்றால் பார்க்கலாம்
வெள்ளி குதிரை வண்டி
இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள வெள்ளியினாலான குதிரை வண்டியை பார்க்கும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்படும். இந்த மியூசியம் கடந்த 1964ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்பதும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மின் விளக்குகள்
இந்த மியூசியத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் மட்டும் பல டன் எடை கொண்டது என்றும் பெல்ஜியம் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சரவிளக்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தில் அலங்காரம்
இந்த மாளிகையை அலங்காரம் செய்வதற்கு 560 கிலோ தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகையின் மேல்தளம் மேலும் மிகவும் வலிமையானது. எவ்வளவு வலிமையானது என்றால் எட்டு யானைகளை கொண்டு நிறுத்தினாலும் உறுதிபட நிற்கும் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.