நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் செலவினங்கள், மொத்த வருவாயில் 2.4 மடங்கு (240 சதவீதம்) செலவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய்க்கு (வரி, வரி அல்லாத வருவாய். மூலதன ரசீதுகள் ) எதிராக, செலவு 16.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அரசு 9.3 லட்சம் கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியது. ஆனால் அதே காலகட்டத்தில் 16.55 லட்சம் கோடி ரூபாயினை செலவழித்தது. இது வருமானத்தின் 1.77 மடங்காகும்.
இந்த நிதி பற்றாக்குறை அதிகரிப்பு அதிக செலவினங்களால் ஏற்படவில்லை, மாறாக மோசமான வருவாய் மற்றும் பங்கு விற்பனை (disinvestment) குறைந்துள்ளதால் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் உணவுக்கு வழங்கிய மானியம் 1,05,203 கோடி ரூபாயாகும். இது முந்தைய ஆண்டில் 1,29,788 கோடி ரூபாயாகும். இது 18.94 சதவீதம் குறைவாகும்.
இதுவே யூரியாவுக்கு வழங்கிய மானியம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 3.87% அதிகரித்து 48,011 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 46,222 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இதே பெட்ரோலியத்திற்கான மானியம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் -35.02% குறைந்து, 19,391 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 29,840 கோடி ரூபாயாக இருந்தது.
ஊட்டச்சத்து அடிப்படையிலான உரங்கள் (Nutrient based fertilizers) மானியம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் -38.70% குறைந்து, 12,795 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 20,873 கோடி ரூபாயாக இருந்தது.
ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் வழங்கிய மானியம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 18.23% குறைந்து, 1,85,400 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,26,724 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கொரோனாவின் காரணமாக அரசு பல சுற்று ஊக்கத் தொகைகளை அறிவித்து இருந்தாலும், அரசாங்கம் அதன் செலவுகளை கட்டுக்குள் வைத்துள்ளது, இதற்கு சரியான உதாரணமே இந்த மதிப்பீடுகள் தான். நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த செலவினம் கடந்த ஆண்டை காட்டிலும் 0.4% குறைந்துள்ளது. ஆனால் மறுபுறம் அரசுக்கு வரவேண்டிய வரி வசூல் கூர்மையான சரிவினைக் கண்டுள்ளது. முக்கியாக கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்தது. இதனால் நிதிப்பற்றாக்குறையும் உயர்ந்துள்ளது.