டெல்லி: இந்தியாவில் தனியார் வங்கிகள் என்ற உடனேயே நினைவுக்கு வரும் அளவுக்கு நம்மில் பதிந்து போன பெயர் என்றால் அது ஐசிஐசிஐ வங்கி தான்.
ஐசிஐசிஐ வங்கி என்றால் அந்த வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி சந்தா கோச்சரை தவிர்த்து விட்டுப் பார்க்க முடியாது.
இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கி வளர்ந்ததற்கு மிக முக்கிய காரணமான தலைவர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல. அந்த அளவுக்கு வங்கிக்காக உழைத்தவர் தான். ஆனால் இன்று கதையே வேறு..!
படிப்பு
ஒரு பக்கம் ஐசிஐசிஐ வங்கி இந்தியாவில் வளர்ந்தது என்றால், மறு பக்கம் சந்தா கோச்சாரும் வளர்ந்தார். அதுவும் அசுரத் தனமாக வளர்ந்தார். ராஜஸ்தானில் பிறந்து, மும்பையில் பி காம் படித்து, ICWA படித்து, அப்படியே ஒரு எம்பிஏ படித்தவர் சந்தா கோச்சார்.
கவனம்
1984 வாக்கில் ஐசிஐசிஐ வங்கியில் வேலைக்கு சேர்ந்தார். திட்டத்தை பரிசீலித்து கடன் கொடுக்கும் அதிகாரியாக சேர்ந்தார். வங்கி வியாபாரங்களை உள் வாங்கத் தொடங்கினார். உயர் அதிகாரிகள் கண்ணில் படத் தொடங்கினார். வங்கியை புதிதாக கட்டமைக்கும் நபர்களில் உருவாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பணி உயர்வுகள்
அதன் பின் சந்தா கோச்சரின் கிராஃப் மேல் நோக்கித் தான் போனது. உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணை நிர்வாக இயக்குநர், முதன்மைப் பொது மேலாளர், இணை நிர்வாக இயக்குநர், நிர்வாக இயக்குநர், முதன்மைச் செயல் அதிகாரி என அதிரடியாக வளர்ந்தார்.
திறமைக்கு மரியாதை
சுமார் 2009 - 2018 வரை ஐசிஐசிஐ வங்கியை கட்டி ஆண்டார். பல துறைகளில் ஐசிஐசிஐ வங்கியை முன்னேற செய்தார். ஆனால் விதி விளையாடி விட்டது. வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் கொடுத்து, வாராக் கடன் ஆக்கப்பட்டது நினைவில் இருக்கலாம்.
ராஜினாமா
இந்த வீடியோகான் கடன் பிரச்னையின் காரணமாக, கடந்த அக்டோபர் 2018 தன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். இப்போது இத்தனை கார்ப்பரேட் சுவாரஸ்யம் கொண்ட கதையை பாலிவுட் படமாக எடுத்துவிட்டார்கள். அங்கு தான் பிரச்னையே..!
தடை
'Chanda: A Signature that Ruined a Career' என்கிற பெயரில் எடுத்த சந்தா கோச்சரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை வெளியிட டெல்லி மாவட்ட நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. மேற்கொண்டு நீதிமன்ற ஆணை வரும் வரை இந்த படத்தை வெளியிடக் கூடாது எனச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.
வழக்கு
சந்தா கோச்சார் தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், சந்தா கோச்சாரைப் பற்றி, இந்த படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே சந்தா கோச்சாரை பலரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு சந்தா கோச்சாரைப் பற்றி படம் எடுக்க, சந்தா கோச்சாரிடம் எந்த ஒரு அனுமதியும் வாங்கவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்கள்.