இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாகவே, குறிப்பாக ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது.
இதில் முக்கியமாக டாடா சன்ஸ் சேர்மனாக இருக்கும் சந்திரசேகரன் மீண்டும் இப்பதவியில் நியமனம் செய்ய டாடா டிரஸ்ட் தரப்பில் பல்வேறு கேள்விகளும், தீர்வுகளம் தேவை என டாடா டிர்ஸ்ட் தலைவர் நோயல் டாடா கூறி வருகிறார்.

இந்த நிலையில் டாடா சன்ஸ் தனது வருடாந்திர முடிவுகளை வெளியிட்டுள்ளது, 2026ஆம் நிதியாண்டில் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் சுமார் 22 சதவீத அதிக லாபத்தை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதைவிட முக்கியமாக தற்போது டாடா குழுமத்தில் பேசுபொருளாக இருக்கும் ஏர் இந்தியா மற்றும் டாடா டிஜிட்டல் போன்ற பிரிவுகளில் தற்போது நஷ்டம் ஏற்பட்டாலும், நீண்ட கால வளர்ச்சி அடிப்படையில் இப்பிரிவில் தொடர்ந்து முதலீடு செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளார் சந்திரசேகரன்.
2026ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா 22,238 கோடி ரூபாய் இழப்பையும், டாடா டிஜிட்டல் 4974 கோடி ரூபாய் இழப்பையும், பேட்டரி பிரிவான Agratas 1,101 கோடி ரூபாய் இழப்பையும், ஐபோன் தயாரிப்பு பிரிவான டாடா எலக்ட்ரானிக்ஸ் 1,611 கோடி ரூபாய் இழப்பையும் எதிர்கொண்டு வருகிறது.
மறுமுனையில் டாடா சன்ஸ் நிறுவனத்தை பார்த்தால் லாபம் 22 சதவீதம் உயர்ந்து 31,961 கோடி ரூபாயாகவும், வருவாய் 9.1 சதவீதம் உயர்ந்து 42,367 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும் டாடா சன்ஸ் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு தலா 1,10,717 ரூபாய் ஈவுத்தொகையாக அளிக்க நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
டாடா குழுமத்தை மொத்தமாக பார்க்கும் போது வருவாய் 7.8 சதவீதம் உயர்ந்து 16.24 லட்சம் கோடி ரூபாயாகவும், லாபம் 52 சதவீதம் உயர்ந்து 1.71 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
2020ஆம் நிதியாண்டின் நிலையை ஒப்பிடும் போது வருவாய் 2.1 மடங்கும், லாபம் 5.4 மடங்கும் அதிகமாக பதிவு செய்துள்ளோம், சந்தை மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது என என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார், இதன் மூலம் டாடா குழுமத்தில் செய்யப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் எந்தளவுக்கு பலன் அளித்துள்ளது என விளக்கினார்.
அடுத்தாக நஷ்டத்தை எதிர்கொண்டு இருக்கும் நிறுவனங்களின் தற்போதை நிலை, நஷ்டத்திற்கான காரணம், எதை நோக்கி இப்பிரிவுகள் சென்றுக்கொண்டு இருக்கிறது, ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் சந்திரசேகரன் இந்த வருடாந்திர முடிவுகளை வெளியிடும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக ஏர் இந்தியா அடுத்த 5-10 வருடத்தில் மொத்தமாக உருமாறப்போவதாகவும், இதற்கு தொடர்ந்து முதலீடுகளை உட்செலுத்த வேண்டிய கட்டாயத்திலும் நிர்வாகம் உள்ளதாக தெரிவித்தார்.
இத்தகைய நிலையில் தான் ஆகஸ்ட் 18ஆம் தேதி டாடா சன்ஸ் அதன் பங்குதாரர்கள் மற்றும் தலைவர்கள் அடங்கிய வருடாந்திர பொது கூட்டம் நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் தான் என்.சந்திரசேகரன் மீண்டும் சேர்மன் ஆக நியமிக்கப்படுவாரா என்பதை வாக்குகள் மூலம் உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications

