மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியில் இல்லையென்றாலும் தொடர்ந்து ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்த மெல்ல மெல்ல வெளியேறி வரும் தோனி பல துறையில் வர்த்தகத்தை செய்ய துவங்கியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் பல நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் உள்ளார்.
இந்நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்தில் எம்எஸ் தோனி இணைந்துள்ளார்.
ட்ரோன் ஸ்டார்ட்அப்
ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், நிறுவன பங்குதாரர்களில் ஒருவராகவும் எம்எஸ் தோனி இருப்பார் என்றும் ஜூன் 6 இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாய துறை
சென்னை-யை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கருடா ஏரோஸ்பேஸ் சமீபத்தில் விவசாய துறைக்கு பயன்படும் வகையில் சில முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக கிராம அளவிலான தொழில்முனைவோர் அல்லது பூச்சிக்கொல்லி மற்றும் உர விற்பனையாளர்களுக்கு ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒரு மாதிரி திட்ட வடிவத்தை உருவாக்கியதாக ஏப்ரல் மாதம் தெரிவித்தது.
எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி-யும் விவசாயம் செய்து வருகிறார், அவருக்கு ராஞ்சியில் ஒரு பண்ணை வீடு உள்ளது, அங்கு ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவித்து வருகிறார். இந்நிலையில் விவசாய துறையிலும் தோனி இறங்க முடிவு செய்து வளர்ந்து வரும் Agri drone சேவை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும், நிறுவன பங்குதாரர்ராகவும் சேர்ந்துள்ளார்.
300 டிரோன்
கருடா ஏரோஸ்பேஸ் சுமார் 300 டிரோன்கள், 500 பைலட்களை சுமார் 26 நகரங்களில் வைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தோனியின் தீவிர ரசிகருமான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறினார். இது இந்தியாவின் முதல் ட்ரோன் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் உள்ளது.
ஸ்விக்கி
சமீபத்தில் ஸ்விக்கி இந்தியா முழுவதும் உணவு மற்றும் மளிகை பொருட்களை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய 4 நிறுவனங்களை தேர்வு செய்தது, இந்த 4ல் ஒன்று கருடா ஏரோஸ்பேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications