இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டிவிஎஸ் மோட்டார் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளது.
இந்தியாவில் இருக்கும் முன்னணி இரு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் அதிகப்படியான முதலீட்டைச் செய்து வரும் நிலையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் போட்டியில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
வழக்கத்தை விடவும் இந்த முதலீடு ஸ்பெஷலாகப் பார்க்கப்படுகிறது, ஏன் தெரியுமா..?
சுதர்சன் வேணு
சுதர்சன் வேணு தலைமையிலான டிவிஎஸ் மோட்டார்ஸ் தற்போது அறிவித்துள்ள 1000 கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் பகுதி உற்பத்தி விரிவாக்கத்திற்கும், எலக்ட்ரிக் வாகன பிரிவில் போர்ட்போலியோவை விரிவாக்கம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
எலக்ட்ரிக் வாகன வர்த்தகம்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன வர்த்தகம் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வரும் வேளையில் இந்த முதலீடு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.டிவிஎஸ் மோட்டார்ஸ் தொடர்ந்து 2வது வருடமாக 1000 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையை முதலீடாகச் செய்வதாக அறிவித்துள்ளது.
5-6 லட்சம் வாகனங்கள்
இந்த முதலீடுகள் மூலம் நடப்பு ஆண்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி அளவு ஒரு மாதத்திற்கு 25,000 ஆகவும், அடுத்த வருடம் இதன் அளவு 50000 ஆகவும் உயரும். இதன் மூலம் வருடத்திற்கு 5-6 லட்சம் வாகனங்கள் உற்பத்தி என்ற மாபெரும் இலக்கை அடைய முடியும்.
வர்த்தகச் சந்தை
2025ஆம் ஆண்டுக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள், ஸ்கூட்டர் பிரிவில் 30 சதவீதத்தையும், 3 சக்கர வாகன பிரிவில் 35 சதவீதத்தையும் ஆட்சி செய்யும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை, தற்போது செய்யப்படும் முதலீடுகள் வளர்ந்து வரும் இந்தச் சந்தையைப் பிடிப்பது தான் எனச் சுதர்சன் வேணு தெரிவித்துள்ளார்.
TVS Singapore நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்கத் தனது வெளிநாட்டுக் கிளை நிறுவனமான TVS Singapore-ல் முதலீடு செய்ய உள்ளது, இதில் 750 கோடி ரூபாய் SEMG நிறுவனத்தில் செய்ய உள்ளது.
முதலீடுகள்
இதைத் தொடர்ந்து 130 கோடி ரூபாய் EGO கார்ப்ரேஷன், 220 கோடி ரூபாய் நார்டன் மோட்டர்சைக்கிள் பிரிவிலும் முதலீடு செய்ய உள்ளது. 2022ஆம் நிதியாண்டில் TVS Singapore நிறுவனத்தின் மொத்த முதலீடு அளவு 1892 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்
இதைத் தாண்டி டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் மூலதனமாகக் கூடுதலாக 730 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படுவதால் இந்நிறுவனத்தின் உற்பத்தி, விரிவாக்கம் மேம்பட்டாலும் லாப அளவுகள் பாதிக்கும் என அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
டிவிஎஸ் மோட்டார் பங்குகள்
இன்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 0.42 சதவீதம் உயர்ந்து 883.65 ரூபாயாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 40.48 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை சுமார் 254.65 ரூபாய் உயர்ந்துள்ளது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டார் நிர்வாகம் மே மாதம் சுதர்சன் வேணு-விடம் மாறிய பின்னர் அதிரடி வளர்ச்சி தான்.