பன்னாட்டு நிறுவனங்கள் வேக வேகமாக சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. குறைந்த செலவில் அமைக்கப்படும் அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள், டேட்டா சென்டர் விரிவாக்கம் போன்ற முக்கியமான விஷயங்கள் தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சென்னை இந்தியாவின் முன்னணி டெக் ஹப்பாக மாறி வருகிறது.
ப்ராப்பர்ட்டி டேட்டா அனாலிடிக்ஸ் நிறுவனமான சிஆர்இ மேட்ரிக்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் டயர் 1 நகரங்களில் ஜிசிசி மையங்களுக்கு முதல் சாய்ஸாக இருப்பது சென்னை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது 400-க்கும் மேற்பட்ட ஜிசிசி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 2.1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஜிசிசி மையங்கள் தொடர்ந்து சென்னைக்கு வந்ததால் அலுவலக இடங்களுக்கான தேவை 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஹைதராபாத், பெங்களூர் போன்ற பிற நகரங்களுக்கு மாற்றாக பொறியியல், ஆராய்ச்சி மற்றும் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் போன்ற பணிகளுக்காக ஜிசிசி நிறுவனங்கள் சென்னையை தேர்வு செய்து வருகின்றன.
சென்னையில் 12 கோடி சதுர அடி பரப்பிலான பிரம்மாண்டமான கிரேட் A மற்றும் A + கட்டிடங்களும் உள்ளன. அதே நேரம் 4 கோடி சதுர அடி பரப்பிலான அலுவலகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
நிறுவனங்கள் அதிகம் சென்னையை தேர்ந்தெடுப்பதால் அலுவலக இடங்களுக்கான தேவை 1.8 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதே நேரம் காலியாக இருந்த அலுவலக இடங்களின் அளவும் 15.8 சதவீதத்திலிருந்து 9.9 சதவீதமாக குறைந்திருக்கிறது.
அறிக்கையின் படி கிரேட் A அலுவலகங்களுக்கான மாத வாடகை சதுர அடி ஒன்றுக்கு 75 ரூபாயாக இருக்கிறது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களோடு ஒப்பிடும்போது வாடகை செலவு சென்னையில் 20 முதல் 60 சதவீதம் குறைவு என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி நிறுவனங்கள் சென்னையைத் தேர்ந்தெடுப்பதற்கு மேம்படுத்தப்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகளும் ஒரு காரணமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்காக 63,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1070 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் அளவிற்கு 3 துறைமுகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
ஐடி நிறுவனங்கள் சரிவர இயங்குவதற்கு டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளும் தேவை. சென்னை 6 முக்கிய சப் மரைன் கேபிள்கள் இணைக்கப்படும் இடமாக இருப்பதால், இங்கு சிறந்த டிஜிட்டல் சேவையும் கிடைக்கிறது. இந்தியாவில் இயங்கி வரும் டேட்டா சென்டர்களில் சென்னை 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் டேட்டா சென்டர்களின் அடிப்படையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள 66% அலுவலக கட்டிடங்களுக்கு பசுமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படி குறைந்த வாடகை, எளிதில் கிடைக்கும் இடம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக சென்னை கெத்து காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications
