அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறும் திட்டத்தை உறுதிப்படுத்திய நிலையில் குஜராத் சனந் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இதற்குக் குஜராத் அரசும் ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை யார் கைப்பற்றப் போகிறார் என உறுதியாகத் தெரியாத நிலையில் இரு தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதேவேளையில் ஃபோர்டு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்காகப் புதிய முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
ஃபோர்டு தொழிற்சாலை
சென்னையில் கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு தொழிற்சாலையில் 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் போராட்டத்தின் காரணமாக மே 30 முதல் இத்தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற போராட்டம் குஜராத் சனந் தொழிற்சாலையிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
2000 ஊழியர்கள் போராட்டம்
ஃபோர்டு நிர்வாகம் தொழிற்சாலையை விற்பனை செய்து விட்டு இந்தியாவை வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு பணியை விட்டு வெளியேறும் ஊழியர்கள் நல்ல ஊதியம் வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துத் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இழப்பீட்டுத் தொகை
இதுகுறித்து சென்னை ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்கள் கூறுகையில் நாங்கள் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், இதனாவ் உற்பத்தி பணிகள் மொத்தமும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலையில் எங்களுக்கான சிறந்த இழப்பீட்டுத் தொகுப்பைக் கேட்டு உள்ளோம், அதை நிர்வாகம் ஏற்கத் தயாராக இல்லை...," என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஜூன் 30
ஜூன் 30ஆம் தேதி சென்னை ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்களுக்குக் கடைசி வேலைநாள் ஆக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால் முன் கூட்டியே உரிய severance package-ஐ பெறவும், வரைவாகப் பெறவும் போராட்டத்தில் ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.
15 நாள்
நிர்வாகத் தரப்பில் இந்த severance package வழங்க 15 நாள் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர், இதை விரைவாக அளிக்கப்பட வேண்டும் என ஃபோர்டு நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3.7 பில்லியன் டாலர் முதலீடு
அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார்ஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மிச்சிகன், ஓஹியோ மற்றும் மிசோரி ஆகிய இடங்களில் உள்ள அசெம்பிளி ஆலைகளில் எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காகப் புதிதாக 3.7 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது.
எலக்ட்ரிக் வாகன பிரிவு
2026 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வாகன பிரிவில் சுமார் 50 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ள ஃபோர்டு நிறுவனம் இதன் ஒரு பகுதியாகத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3.7 பில்லியன் டாலரில், 2.3 பில்லியன் டாலர் பணத்தை எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக முதலீடு செய்ய உள்ளது ஃபோர்டு.