நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சென்னை ஆலையில், சமீபத்தியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இது கடந்த டிசம்பர் 18 அன்று மூடப்பட்டது. இது 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜனவரி 12, 2022 அன்று திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள பிரபலமான ஸ்மார்ட்போன் ஆலைகளில் ஒன்றான இந்த ஃபாக்ஸ்கான் ஆலையின், பெண் ஊழியர்கள் தங்கும் விடுதியில் உணவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர்.
பெண்கள் பாதிப்பு
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனினும் தொடர்ந்து சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இது குறித்து விடுதி நிர்வாகம் சரியாக கண்டு கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தின் மத்தியில் தான் போராட்டம் வெடித்தது.
ஊழியர்கள் போராட்டம்
இதனைத் தொடர்ந்து தான் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கினர். இந்த பிரச்சனை ஆரம்பத்தில் சிறிய பிரச்சனையாக தொடங்கியிருந்தாலும், பின்னர் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தான் ஃபாக்ஸ்கான் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் முக்கிய ஆலை
தமிழகத்தில் உள்ள முக்கிய ஆலைகளில் ஒன்றான இதில் சியோமி, ஆப்பிள் என பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவை இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதோடு மட்டும் அல்லாமல், ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதற்கிடையில் முக்கிய கூட்டாளியான ஆப்பிள் நிறுவனம் அந்த சமயத்தில் ஊழியர்களின் தங்கும் வசதி, உணவு ஆகியவை தரமாக இருக்க வேண்டும். அதனை ஃபாக்ஸ்கான் உறுதி செய்ய வேண்டும் என கூறியது.
சீனா காரணமா?
இதற்கிடையில் டிசம்பர் 18ம் தேதி மூடப்பட்ட இந்த ஸ்ரீபெரும்புதூர் ஆலை, மீண்டும் வரும் புதன்கிழமையன்று (ஜனவரி 12) திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்பிரச்சனை வெடித்த சமயத்தில் இப்பிரச்சனைக்கு சீனா காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications