உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து தென் ஆசிய நாடுகளுக்குக் குறிப்பாக இந்தியாவிற்கு அதிகளவில் மாற்றியுள்ளது.
இந்தியாவில் இதுநாள் வரையில் பழைய ஐபோன்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் முதல் முறையாகத் தனது உற்பத்தி கூட்டாளியான பாக்ஸ்கான் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் லேட்டஸ்ட் மாடலான ஐபோன்13-ஐ தயாரிக்கும் பணியைத் துவங்கியுள்ளது.
ஐபோன் டிமாண்ட்
உலகளவில் ஐபோனுக்கான டிமாண்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி மற்றும் வர்த்தக எண்ணிக்கை அதிகளவில் பாதித்து வருகிறது, அடுத்த சில மாதங்களுக்குச் சிப் தட்டுப்பாடு பிரச்சனை தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் ஆப்பிள், சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தனது சமீபத்திய மாடலான ஐபோன்13 தயாரிக்கும் சோதனை திட்டத்தைத் துவங்கியுள்ளது.
சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலை
இந்தச் சோதனை திட்டம் முடிந்த சில நாட்களிலேயே வர்த்தகச் சந்தைக்குச் செல்லும் ஐபோன்13-ஐ தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளதாகவும், பிப்ரவரி 2022 முதல் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான ஐபோன்13 சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
சிப் தட்டுப்பாடு
உலகம் முழுவதும் சிப் தட்டுப்பாடு இருந்தாலும் ஆப்பிள் தனது ஸ்மார்ட்போனுக்கான சிப்களைப் பெற்றுள்ளது, இதன் வாயிலாகவே சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி விரிவாக்கத்திற்கான பணிகளைச் செய்து வருகிறது, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தியைக் குறைத்துள்ள நிலையில் ஆப்பிள் சிப் பிரச்சனையைத் தீர்த்துள்ளது.
ஐபோன் சப்ளை
சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உலக நாடுகளில் ஐபோன் சப்ளை அதிகரிக்கும், இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்குக் கடந்த காலாண்டு முடிவில் பெரும் பிரச்சனையாக இருந்த சப்ளை செயின் பிரச்சனை பெரிய அளவில் குறையும்.
ஏற்றுமதி அளவீடு
மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் ஏற்கனவே 20 முதல் 30 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தற்போது இதன் அளவீடும் அதிகரித்த துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.