அரிசி உமி என்பது அடுப்பில் எரிபொருள் ஆகவோ அல்லது மாட்டு தீவனமாகவோ பயன்படுத்தப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சென்னை தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய ப்ளைவுட் உற்பத்திக்கு அரிசி உமியை பயன்படுத்தி வேற லெவலில் யோசித்திருக்கிறார்.
இந்த யோசிப்பின் விளைவாக அவர் தற்போது அரிசி உமி மூலம் செய்த ப்ளைவுட் தயாரித்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
ப்ளைவுட் உற்பத்தி
ப்ளைவுட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. தொழில்துறை தரவுகளின்படி, ப்ளைவுட் உள்நாட்டு சந்தை 2021ஆம் ஆண்டு ரூ.243.9 பில்லியனை எட்டியது என்பதும் இது 2027ஆம் ஆண்டு ரூ.344.2 பில்லியனை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
ப்ளைவுட் பயன்கள்
பலமான பசைகளை பயன்படுத்தி மெல்லிய அடுக்குகளை ஒன்றிணைத்து தயாரிக்கப்படும் ஒட்டு பலகை தான் ப்ளைவுட் என்பதாகும். இது தரை, கூரை, தளபாடங்கள், கதவுகள், உட்புறச் சுவர்கள், வெளிப்புற உறை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மரத்தில் தயாராகும் ப்ளைவுட்
ப்ளைவுட் முழுக்க முழுக்க மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதால் மரத்தின் தேவை அதிகரித்து, வளர்ந்து வரும் ப்ளைவுட் தேவையை பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் மேலும் மேலும் மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்படலாம். இதனை உணர்ந்து சென்னை ப்ளைவுட் உற்பத்தியாளர் மரத்திற்கு பதிலாக மாற்று வழியை கண்டுபிடித்துள்ளார்.
சென்னை தொழிலதிபர்
சென்னையில் வசிக்கும் பிஎல் பெங்கானி, ப்ளைவுட் மற்றும் பேனல் பொருட்கள் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். 2016 ஆம் ஆண்டில், பெங்கானி ப்ளைவுட் தயாரிக்க மாற்று யோசனையை கண்டுபிடித்தார்.
அரிசி உமி
சென்னையில் பெங்கானி தொழிற்சாலை பல அரிசி ஆலைகள் உள்ள பகுதியில் அமைந்திருந்தது. அரிசி அகற்றப்பட்ட பிறகு தொழிற்சாலை கழிவுகளான அரிசி உமியை பயன்படுத்தி, இயற்கை நார் கலவை வாரியம் அல்லது 'என்எப்சி போர்டு' என்று அழைக்கப்படுவதை பெங்கானி உருவாக்கினார்.
உமியில் ப்ளைவுட்
இதற்காக அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக தொழில்துறையில் உள்ள பலரிடம் பேசி பல்வேறு கருத்துகளை பெற்றார். முழு ஆராய்ச்சியும் செயல்முறையில் சரியான கலவையை பெற கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. 2019ஆம் ஆண்டில் அரிசி உமியால் செய்த ப்ளைவுட்தயாரானது என பிஎல் பெங்கானி மகள் பிரியங்கா தெரிவித்தார்.
எப்படி தயாராகிறது?
ப்ளைவுட்பலகைகள் விவசாயக் கழிவுகள், இயற்கை தாதுக்கள், நச்சுத்தன்மையற்ற தெர்மோஸ் இணைப்பு ஆகியவைகளால் தயாரிக்கப்படுகிறது. அரிசி உமியை தூள் வடிவில் நசுக்கி, பின்னர் ஈரப்பதத்தை குறைக்க 70-80 டிகிரியில் உலர்த்துவதன் மூலம் பெறப்படும் திடப்பொருள் ப்ளைவுட் பலகையின் அடித்தளமாக செயல்படுகிறது.
வணிகம்
சந்தையில் இவ்வகை ப்ளைவுட் போர்டுகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து, பிஎல் பெங்கானியின் நிறுவனம் நல்ல வணிகம் செய்து வருவதாகவும், மேலும் மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வடையும்போது வணிகம் இன்னும் அதிகளவில் வளரும் என்றும் பிஎல் பெங்கானி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி
தற்போது இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் எங்களுடைய கிளைகள் உள்ளது. சமீபத்தில் நாங்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தொடங்கினோம். நாங்கள் எங்கள் சர்வதேச இருப்பை விரிவுபடுத்த முயற்சிக்கிறோம்," என்று பிஎல் பெங்கானி தெரிவித்தார்.
குறைந்த விலை
அரிசி உமி மூலம் ப்ளைவுட் செய்வதால் ஆண்டுக்கு 10,000 கன மீட்டர் இயற்கை மரத்தை வெட்டாமல் சேமிக்க முடியும் என்றும் அதுமட்டுமின்றி சிறந்த தரமான ப்ளைவுட் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.