தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் முக்கியமான ஒரு அமெரிக்க நிறுவனத்தை ஈர்க்க தவறியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான குவால்காம், ஹைதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
குவால்காம்
செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் வையர்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் குவால்காம் நிறுவனம், அமெரிக்காவை அடுத்து உலகிலேயே மிகப்பெரிய அலுவலகத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்காகக் குவால்கம் ஹைதராபாத்-ஐ தேர்வு செய்துள்ளது.
3,904.55 கோடி ரூபாய்
குவால்கம் நிறுவனம் சுமார் 3,904.55 கோடி ரூபாய் முதலீட்டில் தனது ஹைதராபாத் ஆப்ரேஷன்ஸ்-ஐ விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அக்டோபர் 2022க்குள் மிகப்பெரிய கேம்பஸ்-ஐ அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.
8700 பேருக்கு வேலைவாய்ப்பு
மேலும் இந்த 3904.55 கோடி ரூபாய் முதலீடு அடுத்த 5 வருடத்தில் முதலீடு செய்யவும், இதன் மூலம் புதிதாக 8700 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் குவால்காம் முடிவு செய்துள்ளது. இப்புதிய அலுவலகம் ராயதுர்கம் பகுதியில் சுமார் 1.572 மில்லியன் சதுரடியில் அமைக்கப்பட உள்ளது.
தெலுங்கானா
தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமராவ் தற்போது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் உள்ளார். இந்தப் பயணத்தில் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து வரும் நிலையில், குவால்காம் உயர் அதிகாரிகளைச் சந்தித்த போது இந்தப் புதிய முதலீடு மற்றும் அலுவலக அமைப்பது குறித்துத் தெரிவித்துள்ளனர்.
குவால்காம் முக்கிய அதிகாரிகள்
சான் டியாகோவில் உள்ள குவால்காம் தலைமையகத்தில் கே.டி. ராமராவ்-ஐ குவால்காம் CFO, ஆகாஷ் பால்கிவாலா, துணை தலைவர்களான ஜேம்ஸ் ஜீன், லக்ஷ்மி ராயபுடி, பராக் ஆகாஷே மற்றும் மூத்த இயக்குனர் தேவ் சிங் ஆகியோர் சந்தித்தனர். மேலும் குவால்காம் தெலுங்கானா மாநிலத்தின் விவசாயம், ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் கல்வி மறை மற்றும் கனெக்டட் டிவைஸ் ஆகியவற்றில் பணியாற்றவும் திட்டமிட்டு உள்ளது.
முக.ஸ்டாலின்
இதேவேளையில் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளையும், நிறுவனங்களையும் இணைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் துபாயில் சில முக்கியமான நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார்.
குவால்காம் விளக்கம்
இதுக்குறித்து குவால்காம் அதிகாரிகள் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது குவால்காம் இந்தியாவில் இன்னோவேஷன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்க உறுதிபூண்டுள்ளது. சான் டியாகோவை அடுத்து இந்தியாவில் மிகப்பெரிய இன்ஜினியரிங் குழுவை கொண்டு உள்ளோம். தெலுங்கானா செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும் குவால்காம் முடிவின் வாயிலாக, இந்தியாவின் பிற பிராந்தியங்களின் செயல்பாடுகளில் எவ்விதமான பாதிப்போ அல்லது குறைப்போ இருக்காது. தமிழ்நாடு எங்களுக்கு முக்கியமான மூலோபாய இடமாகும், இதனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து, ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்போம் என குவால்காம் செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்தார்.