தமிழ்நாட்டில் உற்பத்தி, சேவை, ஐடி என பலதுறைகளிலும் முன்னணியில் இருக்கும் ஒரு நகரம் சென்னை. விமான நிலையம், துறைமுகம் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தேடி வந்து சென்னையில் முதலீடு செய்கின்றன.
சென்னையின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கவும் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கண்டிப்பாக தேவைப்படும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டல துணை தலைவர் பி. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையம் அமைவதில் சிக்கல் நீடித்து வரும் சூழலில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் விமான நிலையம் இன்னும் சில ஆண்டுகளில் அதன் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளும் திறனை எட்டி விடும் என்பதால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியமாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. அப்போது விஜய் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையில் அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் சார்பாக பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து கூறப்படுகிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவையும் ஒரு தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர். தொழில்துறை சார்ந்தவர்கள் பரந்தூர் விமான நிலையம் தேவை என்கின்றனர். சென்னைக்கு அருகே விமான நிலையம் அமைக்க வேறு எங்குமே இடம் இல்லை என கூறுகின்றனர்.
இந்த சூழலில் தான் இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டல துணை தலைவர் பி. ரவிச்சந்திரன் எந்த ஒரு விமான நிலையமும் ஒரு பொருளாதாரத்தின் இயந்திரம் போன்றது என கூறியுள்ளார். சென்னை ஒரு முக்கிய உலகளாவிய உற்பத்தி மையமாக மாறி வருவதால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டும் அவர், இந்தியாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் ஐபோன்களில் சுமார் 50 சதவீதம் தமிழ்நாட்டில தயாரிக்கப்படுகின்றன, இவற்றை ஏற்றுமதி செய்ய விமான நிலையம் அவசியம் என்கிறார். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் சிறந்த வான்வழி சரக்கு போக்குவரத்து கட்டமைப்பை கொண்டதாக இருக்க வேண்டுமன வலியுறுத்தியுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்ட விவகாரத்தில் தீர்வு காண்பதற்கோ அல்லது மாற்று இடத்தை தேர்வு செய்யவோ அரசுக்கு தகுந்த அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ள அவர் ஆரம்பக் கட்டத்திலேயே முதலமைச்சர் மீது குறை கூறுவது நியாயமற்றது என்றும், அரசு இதற்கு சரியான ஒரு தீர்வை எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தொழில் கூட்டமைப்பு எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பரிந்துரைக்கவில்லை ஆனால் கண்டிப்பாக இரண்டாவது விமான நிலையம் அமைய வேண்டும் அது சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் இடத்தில் அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என தெளிவுபடுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

