தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மீனம்பாக்கத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் தேவை என்ற கட்டாயம் உண்டானது.
தொழில் ரீதியாகவும் போக்குவரத்து ரீதியாகவும் சென்னை வளர்ச்சி பெற இரண்டாவது சர்வதேச விமான நிலையம் முக்கியம். அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்க முடிவு செய்தனர். பொது - தனியார் கூட்டு முயற்சியில், 5,600 ஏக்கர் பரப்பரளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. 2023ஆம் ஆண்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

விமான நிலையம் அமைக்க தேவையான நிலத்தில் அரசுக்கு சொந்தமானதை தவிர்த்து 3,700 ஏக்கர் நிலம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டு 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன.
நிலம் வழங்கும் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பரந்தூர் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே குறிப்பிட்ட சில கிராம மக்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் , தவெக தொடங்கிய சமயத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளையும் கிராம மக்களையும் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.
விமான நிலைய திட்டத்திற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு டெண்டர் விட்டு அடிக்கல் நாட்ட வேண்டியது தான் பாக்கி. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது; முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். எனவே பரந்தூர் விமான நிலைய திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் விஜய் தலைமையில் பரந்துார் விமான நிலையம் தொடர்பான ஆலோசனை ,கூட்டம் நடந்தது. இதில், தலைமை செயலர், டிட்கோ அதிகாரிகள், விமான நிலைய திட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த சூழலில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நில எடுப்பு உள்ளிட்ட பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது என கூறுகிறது. இது வரை கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க ஆலோசனை நடந்து வருவதாக, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, இதுவரை, 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இது, மொத்த நிலத்தில், 30 சதவீதம் தான். இவை, நில எடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படாமல், நில உரிமையாளர்கள் நேரடியாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளனர். அரசின் கொள்கை முடிவு காரணமாக, விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால், கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலங்களை, நில உரிமையாளர்களுக்கு திரும்ப தர வாய்ப்பில்லை.
அதேபோல, நில எடுப்பு பணிக்கான கால வரம்பு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே விமான நிலையம் அமைக்கப்படவில்லை என்றால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க வாய்ப்பு இருக்குமா என்ற கோணத்தில், ஆலோசனை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்களாம். விமான நிலைய திட்டம் செயல்பாட்டிற்கு வருமா அல்லது தொழில்பூங்கா அமையுமா என, இன்னும் முடிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

