சென்னை மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க அடையாளமாக இருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை. இங்கு தான் காலம் காலமாக தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் இங்கிருந்து தான் நம் மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றும் முடிவுகளை எல்லாம் எடுத்தார்கள். ஆனால் இங்கிருந்து தலைமை செயலகம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
1644ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் சென்னையில் கட்டப்பட்டது தான் புனித ஜார்ஜ் கோட்டை. அப்போது ஆங்கிலேயர்கள் இங்கிருந்து தான் மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்தனர். பின்னர் நாடு சுதந்திரம் அடைந்த உடன் மாநில அரசின் தலைமை செயலகமாக மாறியது. கிட்டதட்ட 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் நிர்வாக மையமாகவும் ஆட்சி அடையாளமாகவும் திகழும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தலைமை செயலகம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110இன் கீழ் உரையாற்றினார். அப்போது புதிய தலைமை செயலகம தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
சென்னையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமை கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும் என்றும், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் இந்த ஒருங்கிணைந்த தலைமை செயலக வளாகத்தில் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆட்சி நிர்வாகம் விரிவடைய விரிவடைய புதிய புதிய துறைகள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. புனித ஜார்ஜ் கோட்டை 107 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்தாலும் அதில் கணிசமான பகுதியில் மட்டுமே கட்டடங்கள் உள்ளன. பெரும்பாலான பகுதி 4 தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இங்கே புதிதாக கட்டடம் கட்டுவதோ அல்லது இருக்கும் கட்டடங்களை விரிவாக்கம் செய்யவோ முடியாது.
எனவே இட நெருக்கடி, வருங்கால தேவை உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு புதிய தலைமை செயலகம் கட்டப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். ஆனால் சென்னையின் எந்த இடத்தில் புதிய தலைமை செயலகம் அமையும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தலைமை செயலகம் இடம் மாற்றப்பட்டாலும் புனித ஜார்ஜ் கோட்டை தொடர்ந்து வரலாற்று சின்னமாக பாதுகாக்கப்படும், வருங்கால சந்ததியினர் வந்து இந்த இடத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இங்கே இருக்கும் என்றார்.
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாக இது திகழும் என தெரிவித்தார்.
அடுத்ததாக தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தய பாதை, அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications

