இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக இருக்கிறது ரேஷனில் கிடைக்கும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தான். ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டையை கொண்டு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை வாங்குவதை காண முடிகிறது.
மக்கள் இப்படி ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ரேஷன் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி அங்காங்கே ரேஷன் ஏடிஎம் நிறுவப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டை உள்ளிட்டால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசி உள்ளிட்டவை ஏடிஎம் மெஷின் வாயிலாகவே வழங்கப்பட்டுவிடும்.

இந்த திட்டம் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் சத்தீஸ்கர் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி ரேஷன் பொருட்களை எவ்வித காத்திருப்புமின்றி 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ளும் வகையில், அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் (Annapurti Grain ATM) இயந்திரங்கள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நிறுவப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூர், மற்றும் துர்க், பிலாஸ்பூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் இந்த ஏடிஎம் மையங்கள் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் வங்கிகளின் ஏடிஎம் போல செயல்படுவதால், ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் எந்தவித வரிசையிலும் காத்திருக்காமல் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.
பயனாளிகள் இயந்திரத்தில் உள்ள திரையில் தங்களின் ரேஷன் அட்டை அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அதனைத் தொடர்ந்து, பயோமெட்ரிக் அங்கீகாரம் மேற்கொள்ளப்படும். சரிபார்ப்பு முடிந்ததும், அந்த நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசி இயந்திரத்திலிருந்து வரும் அதனை பையில் பிடித்து கொள்ள வேண்டும்.
ஒரு அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்க முடியும். இந்த இயந்திரங்களில் அரிசி நிரப்பும் பணி முற்றிலும் தானியங்கி முறையில் நடைபெறுகிறது. இந்த புதிய முயற்சி உலக உணவு திட்டத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. ராய்ப்பூரில் உள்ள இந்த இயந்திரம், உள்ளூர் மகளிர் சுய உதவிக்குழுவான 'ஜோதி குழு' மூலம் பராமரிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இந்த ஏடிஎம் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியும்.
இதனால் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்த்து, தங்கள் பணிகளை முடித்த பிறகு பயனாளிகள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இத்தகைய தானிய ஏடிஎம் வசதியைக் கொண்டுள்ள ஐந்தாவது மாநிலமாக சத்தீஸ்கர் இப்போது இணைந்துள்ளது. ஏற்கனவே உத்தரகண்ட், மேகாலயா, குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

