தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தலின் போது விஜய் மற்றும் தவெக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டன. அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தான் ஏராளமான மக்களின் கேள்வியாக இருக்கிறது.
குறிப்பாக மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம், மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், திருமண சீர்வரிசை திட்டம் உள்ளிட்டவை எப்போது செயல்படுத்தப்படும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முந்தைய ஆட்சியில் நடைமுறையில் இருந்த சில மக்கள் நலத்திட்டங்களை தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.

நகை கடன் தள்ளுபடி திட்டம் உட்பட முந்தைய நிர்வாகத்தின் சில மக்கள் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பரிசீலனை செய்யும் என கூட்டுறவு துறை அமைச்சர் காந்தி ராஜ் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் கற்பகம் கூட்டுறவு அங்காடியிலும் அண்ணா சாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் ஆய்வு செய்த அமைச்சர் காந்திராஜ் இந்த தகவலை வெளியிட்டார்.
கூட்டுறவு துறையின் கீழ் தற்போதுள்ள நலத்திட்டங்கள் தொடர்ந்து திறம்பட செயல்படுத்தப்படும் என்றும் அதே துறையின் கீழ் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மறுபரிசீலனைக்காக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார். முந்தைய அரசாங்கத்தின் போது நிறுத்தப்பட்ட நகை கடன் தள்ளுபடி திட்டம் உட்பட அனைத்து நல திட்டங்களும் கூட்டுறவு சங்கங்களின் பழைய முயற்சிகளும் மறுபரிசீலனைக்காக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் பொது நலத்திட்டங்கள் தொடர்ந்து திறம்பட செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நகை கடன் தள்ளுபடி திட்டம் கொண்டுவரப்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் சாமானிய மக்களின் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு குடும்பத்திற்கு ஐந்து சவரன் அல்லது அதற்கும் குறைவான கடன் தொகைக்கு நிலுவையில் இருந்த நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்போது 11.7 லட்சம் பேர் இதனால் பயன் பெற்றனர் ,கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் கடனை அரசு தள்ளுபடி செய்தது. அந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இதற்கிடையே வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோயம்புத்தூரில் அளித்துள்ள பேட்டியில் மகளிருக்கு மாதம் 2500 வழங்கும் திட்டம் மற்றும் மகளிர் இலவச பயண திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். முதல்வர் விஜய் தக்க நேரத்தில் திட்டங்கள் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே கூடிய விரைவில் மகளிர் நிதி திட்டம், மகளிர் இலவச பயணத் திட்டம் மற்றும் நகை கடன் தள்ளுபடி திட்டம் உள்ளிட்டவை குறித்த நல்ல செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

