இன்றைய தேதிக்கு, உலகம் முழுக்க சீனா தான் தலைப்புச் செய்தியில் அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா ஆனாலும் சரி, இந்தியா ஆனாலும் சரி, எல்லாமே சீனா தான். எங்கும் சீனா தான். அந்த அளவுக்கு எல்லா நாடுகளோடும் ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறார்கள் போல.
சரி விஷயத்துக்கு வருவோம். சீனா தன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறதாம். எவ்வளவு அதிகரிக்க இருக்கிறது? ஏன் அதிகரிக்க இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு செய்தியில் விடை காண்போம்.
கச்சா எண்ணெய்
சீனா, இந்த 2020-ம் ஆண்டில், தன் கச்சா எண்ணெய் உற்பத்தியை 193 மில்லியன் டன்னாக உயர்த்த இருக்கிறதாம். கடந்த 2019-ம் ஆண்டு, சீனா, 191 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ததாம். இது 2019-ம் ஆண்டை விட சுமாராக 1 சதவிகிதம் அதிகம்.
இயற்கை எரிவாயு
சிவப்பு ட்ராகன் தேசமான சீனா, தன் இயற்கை எரிவாயு உற்பத்தியையும் இந்த 2020-ம் ஆண்டில் 181 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவுக்கு உயர்த்த இருக்கிறதாம். 2019-ம் ஆண்டு 181 பில்லியன் க்யூபிக் மீட்டருக்கு தான் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக கேஸ் உற்பத்தி 4.3 % அதிகரிக்க இருக்கிறது சீனா.
ஏன் இந்த திடீரென உயர்வு
சீனா, தன்னுடைய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாக்கவும், தன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறார்களாம். கொரோனா வைரஸ் காரணத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக சரிந்து இருக்கும் இந்த நேரத்திலும், சீனா தன் எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து இருப்பது இங்கு தனியே குறிப்பிட வேண்டி இருக்கிறது.
மரபு சாரா ஆற்றல்
ஒரு பக்கம் தன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரித்தாலும், மறு பக்கம் தன் மரபு சாரா எரிசக்தியையும் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த 2020-ம் ஆண்டுக்குள் 900 ஜிகா வாட் மின்சாரத்தை மரபு சாரா முறையில் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications